இந்தியாவின் உயரிய விருதை பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு! எதற்கு தெரியுமா?

Jun 13, 2026 - 08:01
0
இந்தியாவின் உயரிய விருதை பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு! எதற்கு தெரியுமா?

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். 32 வயதான இவர் சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்காக தன்னை தயார் செய்து கடந்த 2017 ஆம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆ்ம் தேதி தெற்கு காஷ்மீர் பகுதியான குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபொழுது ஐந்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மீனாட்சி சுந்தரம் மீது தீவிரவாதிகள் சுட்டதில் வலது தோள்பட்டை மற்றும் வாய்பகுதியில் துப்பாக்கிகள் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது.

சாதாரணமாக யாராக இருந்தாலும், இத்தகைய காயங்கள் அவரை போராட்டத்திலிருந்து பின்வாங்கியிருப்பார்கள். ஆனால் மீனாட்சி சுந்தரம் ஒரு அடி கூட பின்வாங்கவில்லை.  கடுமையான வலியிலும், அதிக ரத்த இழப்பால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற நிலை இருந்தாலும் மீனாட்சி சுந்தரம் தொடர்ந்து தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு ஐந்து தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினார். அவருடைய இந்த துணிச்சலால் தீவிரவாதிகளை வீழ்த்துவதற்கு பெரும்பங்காற்றியது.

ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்

இந்த ஈடு இணையற்ற வீரத்தை பாராட்டி, அவரை கவுரவிக்கும் விதமாக  இந்திய அரசு கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நாட்டின் உயரிய இரண்டாவது விருதான கீர்த்தி சக்கரா விருதினை அறிவித்தது. கடந்த ஜூன் 8 ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரபெளதி முர்மு, மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு கீர்த்தி சக்கரா விருது வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற ராணு வீரர் மீனாட்சி சுந்தரம் அவரது சொந்த கிராமமான கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி கிராமத்திற்கு நேற்று வந்தார்.

இந்த விருதினை பெற்று சொந்த ஊர் திரும்பிய அவருக்கு முன்னாள் ராணுவத்தினர், ஊர் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் திரண்டு நின்று தாரை தப்பட்டை முழங்க, வான வேடிக்கைகள் வெடிக்க, மலர் மாலை, பொன்னாடை போர்த்தி கௌரவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இந்திய நாட்டின் உயரிய விருதான கீர்த்தி சக்கரா விருது தன் கிராமத்து ராணுவ வீரருக்கு  கிடைத்தது கிராம மக்களிடையே எல்லையற்ற மகிழ்ச்சி என ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்

வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

இது குறித்து மீனாட்சி சுந்தரம் பேசுகையில்,  ‘எந்த நிலையிலும் களத்தில் பயங்கரவாதிகளை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே ஒரு ராணுவ வீரனின் எண்ணமாக இருக்கும். நாட்டிற்காக ரத்தம் சிந்தியதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இந்த விருது பெற்றது எனக்கும் என்னைச் சார்ந்த குடும்பத்தார் மற்றும் ஊருக்கும் மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது என மீனாட்சி சுந்தரம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User