கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்
.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமானோர் வந்தார்கள். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் பொதுமக்கள, காவல்துறையினர் சோதனை இட்ட பின்னரே உள்ளே அனுமதிப்பது வழக்கம். அதன்படி போலீசார் சோதனை ஏற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் காக்கி பேண்ட் அணிந்திருந்தார். கலர் சட்டையில் இருந்த அவர், காவல்துறையினரின் பெல்ட் அணிந்திருந்தார். அவரது இரு சக்கர வாகனத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, சுகாதார ஆய்வாளர் பணியிடத்துக்கான நேர்காணலில் பங்கேற்பதற்காக வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் கையில் வைத்திருந்த ஃபைலை காவல்துறையினர் வாங்கி பரிசோதித்தனர். அதில், சி.பி.ஐ ஸ்பெஷல் ஆபீஷர், விஜிலன்ஸ், மத்திய போலீஸ், மத்திய உளவுப்பிரிவு, தேசிய மனித உரிமை ஆணையம், எல்ஐசி என 20-க்கும் அதிகமான போலி அடையாள அட்டைகளை வைத்திருந்தார். அத்துடன் போலியாக த.வெ.க அடையாள அட்டையையும் அவரது பெயரில் தயாரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலம், இந்தி,தமிழ் என பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருந்த விதவிதமாக அடையாள அட்டைகளை பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, அவரது பெயர் வேல்முருகன் (38) என்பதும் நெல்லை மாவட்டம் கூந்தங்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பல வகையான அடையாள அட்டைகளை வைத்திருந்தது குறித்து அவரிடம் போலீசார் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னார். அதையடுத்து அவரை பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இப்போது அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது தெரியவந்தது.

மத்திய மாநில அரசு அலுவலக சீலுடன் கூடிய போலியான அடையாள அட்டைகளைத் தயாரித்த அவர், அவற்றைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் இந்த மோசடிக்குப் பின்னணியில் யாராவது துணையாக இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். வேல்முருகன் மீது அரசு அதிகாரி போல நடித்து ஏமாற்றியதாக வழக்குப் பதிவுசெய்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)