அயோத்தி ராமர் கோயில் பணம் ரூ.7 கோடி கையாடல் - 8 பேர் அதிரடி கைது!

Jun 26, 2026 - 13:32
0
அயோத்தி ராமர் கோயில் பணம் ரூ.7 கோடி கையாடல் - 8 பேர் அதிரடி கைது!

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்பது இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர்.

கோயில் கட்டவும் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பல ஆயிரம் கோடி அளவுக்கு நன்கொடைகளை வழங்கினர். தற்போதும் கோயில் வளாகத்தில் இருக்கும் உண்டியலில் அதிக அளவில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

இந்த உண்டியல் பணம் கையாடல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியும் புகார் செய்திருந்தது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கும்படி கோயில் நிர்வாகம் மாநில அரசிடம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் இப்புகார் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

ராமர் கோயில்

அக்குழு நடத்திய விசாரணையில் கோயில் வளாகத்தில் இருக்கும் உண்டியலில் வசூலான பணத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு விசாரணைக்குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. டின்னு யாதவ், அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, மணீஷ் யாதவ், சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, கருணேஷ் பாண்டே மற்றும் ராம்சங்கர் மிஸ்ரா ஆகியோர் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்பார்வைப் பொறுப்பில் இருந்த யாதவை தவிர, மற்ற அனைவரும் கோயிலில் கிடைக்கும் நன்கொடை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர். ஆரம்பத்தில் இத்திருட்டு குறித்த புகார்களை கோயில் நிர்வாகமும், மாநில அரசும் மறுத்து வந்தது. ஆனால் இப்போது ரூ.7 முதல் 7.5 கோடி அளவுக்கு உண்டியல் பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, 40 உண்டியல் பெட்டிகளில் பக்தர்கள் செலுத்தும் சேகரிக்கப்பட்ட நன்கொடை பணத்தை எண்ணும் பொறுப்பில் இருந்தார். கோவில் நன்கொடையை கையாடல் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேருடன் சேர்ந்து ஸ்ரீவஸ்தவாவின் பங்கு குறித்து விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ராமர் கோயில் உண்டியல் பணத்தில் திருட்டு நடந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User