பெங்களூரு கொலை வழக்கில் அடுத்தடுத்து சிக்கிய காதலி, காதலன் - புதுச்சேரி போலீஸில் சிக்கியது எப்படி?

Jun 26, 2026 - 13:32
0
பெங்களூரு கொலை வழக்கில் அடுத்தடுத்து சிக்கிய காதலி, காதலன் - புதுச்சேரி போலீஸில் சிக்கியது எப்படி?

பெங்களூர் கே.எஸ்.புரத்தை சேர்ந்த சுவேதா என்ற இளம்பெண் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கை உட்பட மூன்று பேரை காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். அதன்பிறகு சுவேதாவையும் அவரது காதலன் கெனத் என்பவரையும் பெங்களூரு காவல்துறையினர் தேடிவந்தனர்.

கடந்த 23-ம் தேதி புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த சுவேதாவை, புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நடத்திய விசாரணையில், தன்னுடைய அப்பா, அம்மா, தங்கையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

கென்னட் - ஸ்வேதா

அத்துடன் தன்னுடன் சேர்ந்து கொலை செய்த காதலன், கோவாவுக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து சுவேதா கைது குறித்து பெங்களூரு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர் புதுச்சேரி போலீஸார். அதையடுத்து புதுச்சேரி வந்த பெங்களூரு போலீஸார், சுவேதாவை அழைத்துச் சென்றனர்.

இந்தநிலையில் நேற்று இரவு உருளையன்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், அண்ணா நகர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், திடீரென வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

அதில் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர், அந்த இளைஞரிடம் விசாரணை செய்தார். அப்போது மது போதையில் இருந்த அந்த இளைஞர் ஊர் பெயரை மாற்றி மாற்றி குறிப்பிட்டதால் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர், அவரை தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையம் நோக்கிச் சென்றார்.

அப்போது அந்த இளைஞர் திடீரென வாகனத்தில் இருந்து குதித்து தப்பியோடினார். அதில் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த அந்த உதவி ஆய்வாளர், துரத்திச் சென்று அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தார்.

உடனே அந்தத் தகவலை காவல் நிலையத்திற்கு தெரிவித்தார். அதற்கடுத்த சில நிமிடங்களில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தார்

இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்

அப்போதுதான் அவர் பெங்களூரில் மூன்று கொலைகளைச் செய்த சுவேதாவின் காதலர் கென்னட் என்பது தெரிய வந்தது. அதையடுத்து பெங்களூரு போலீஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள், கெனத்தை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பெங்களூருவை உலுக்கிய கொலை வழக்கில் தொடர்புடைய இருவரையும் அடுத்தடுத்து கைது செய்ததற்காக புதுச்சேரி போலீஸாருக்கு பெங்களூரு போலீஸார் நன்றி தெரிவித்திருக்கும் நிலையில், உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனிடம் பேசினோம். ``புதுச்சேரி சுற்றுலா மாநிலம் என்பதால், எப்போதும் நாங்கள் ரோந்துப் பணியில் இருப்போம்.

அதன்படி கடந்த 23-ம் தேதி பேருந்து நிலையத்தின் அருகில் நான் ரோந்தில் இருந்தபோது, ஒரு இளம்பெண் ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பின் இருக்கையில் ஆட்டோ ஓட்டுநர் அமர்ந்து கொண்டிருந்தார்.

அந்தக் காட்சி எனக்கு வித்தியாசமாக இருந்ததால், அந்த இளம்பெண்ணிடம் விசாரித்தேன். அவரும் ஊர் பெயரை மாற்றி மாற்றி சொன்னதால், மீண்டும் மீண்டும் விசாரணை செய்தேன். ஒருகட்டத்தில் தன்னுடைய பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்ததாக தெரிவித்தார்.

உடனே பெங்களூரு போலீஸாரிடம் நாங்கள் அதுகுறித்து தெரிவித்தோம். அதன்பிறகு அந்தக் கொலை வழக்கின் விவரங்களைத் தெரிவித்த அவர்கள், புதுச்சேரிக்கு வந்து சுவேதாவை அழைத்துச் சென்றனர்.

அத்துடன் அவரது காதலரும் புதுச்சேரியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று, இரண்டு டீமை அனுப்பியிருந்தனர். இந்த நிலையில்தான் நேற்று எங்கள் எஸ்.ஐ ராமலிங்கம், ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது தலையில் தொப்பியுடன், முகக்கவசம் அணிந்து சென்ற கென்னட்டிடம் அவர் விசாரித்திருக்கிறார். அப்போது தப்பிக்க முயற்சித்த அவரை கைது செய்தோம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User