"பாஜக-வின் டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா" - ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

May 14, 2026 - 17:01
0
"பாஜக-வின் டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா" - ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

நாட்டையே உலுக்கிய 2012-ம் ஆண்டு நிர்பயா சம்பவத்தின் வடு மறைவதற்குள், நாட்டின் தலைநகரான டெல்லியில் மீண்டும் ஒரு இளம்பெண் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மங்கால்புரியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் ராணி பாக் பகுதியில் இருந்து பிதாம்புராவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்துக்காகக் காத்திருந்தார்.

வன்கொடுமை நடந்த ஆம்னி பேருந்து
வன்கொடுமை நடந்த ஆம்னி பேருந்து

அப்போது அந்த வழியாக வந்த பீகார் மாநிலப் பதிவு எண் கொண்ட ஆரஞ்சு நிறத் தனியார் பேருந்து ஒன்று அவர் அருகே நின்றது. காவல்துறையிடம் அந்தப் பெண் அளித்துள்ள புகாரின்படி:

"பேருந்து நடத்துநரிடம் நேரத்தைக் கேட்பதற்காக நான் சென்றேன். அப்போது அவர் திடீரென என்னை பேருந்துக்குள் இழுத்துச் சென்றார். பேருந்து நாங்லோய் பகுதியை நோக்கிச் சென்றபோது, ஓட்டுநரும் உதவியாளரும் என்னைச் சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்தனர்."

சுமார் 7 கிலோமீட்டர் தூரம் ஓடும் பேருந்திலேயே இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. பின்னர், அந்தப் பெண்ணை நாங்லோய் பகுதியில் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.

அதிகாலை 4.45 மணியளவில் நாங்லோய் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் இந்த வழக்கு ராணி பாக் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

தொடர் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் உமேஷ் மற்றும் அவரது உதவியாளர் ராமேந்திரா ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

வன்கொடுமை நடந்த ஆம்னி பேருந்து
வன்கொடுமை நடந்த ஆம்னி பேருந்து

இவர்கள் இருவரும் நாங்லோய் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காகச் சென்றபோது இக்குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தற்போது இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையும், மத்திய அரசும் மௌனம் காப்பதாக ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``நிர்பயா சம்பவத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு கறை. டெல்லி அரசு முடங்கியிருக்கிறாதூ." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சௌரப் பரத்வாஜ், ``ராணி பாக் போன்ற மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், ஒரு பேருந்து பல மணி நேரம் சுற்றித் திரிந்தும், அதில் ஒரு பெண் வன்கொடுமை செய்யப்பட்டும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்தத் தகவலை முன்கூட்டியே வெளியிடவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிஷ் சிசோடியா, ``டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்! பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி நிர்வாகம் முற்றிலும் முடங்கிவிட்டது. பள்ளிகளிலும் பாதுகாப்பு இல்லை, பேருந்துகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை," என விமர்சித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User