ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் பெண்; ₹60,000 மாத வருமானம்! ஏன் இந்த முடிவு?

May 30, 2026 - 16:32
0
ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் பெண்; ₹60,000 மாத வருமானம்! ஏன் இந்த முடிவு?

காலை 9 மணி லாகின், இரவு 9 மணி லாக் அவுட், நடுநடுவே காதைக் கிழிக்கும் மீட்டிங்குகள், நள்ளிரவில் வரும் 'ப்ரொடக்‌ஷன் இஷ்யூ' அழைப்புகள்... பல இளைஞர்களின் கனவாக இருக்கும் ஐடி வேலை, சிலருக்கு மன அழுத்தத்தின் மறுபெயராக மாறிவிடுகிறது.

அப்படிப்பட்ட கார்ப்பரேட் உலகிற்கு ஒரு பெரிய 'குட்பை' சொல்லிவிட்டு, மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து தன் வாழ்க்கையின் ஸ்டியரிங்கை தானே பிடித்துக்கொண்டிருக்கிறார் ஒரு பெண். மாதம் ₹60,000 வருமானத்துடன், முன்பை விட அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறுவது இணையத்தில் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

ஆட்டோ ஓட்டும் பெண்
ஆட்டோ ஓட்டும் பெண்

ஐடி துறையில் கைநிறைய சம்பளத்துடன் பணியாற்றி வந்த இந்தப் பெண்ணுக்கு, வேலை அழுத்தம் என்பது தினசரி போராட்டமாக இருந்துள்ளது. ஓய்வற்ற வேலை நேரம், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த முடியாத தவிப்பு என அனைத்தும் சேர்ந்து அவரை ஒரு கட்டத்தில் சோர்வடையச் செய்துள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தேடலில்தான், யாரும் எதிர்பாராத ஒரு முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஆம், தனது ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஆட்டோ ஓட்டுநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அவருக்கு இது ஒரு சிறந்த மாற்றத்தைக் கொடுத்துள்ளது. இப்போது தனது நேரத்தை அவரே தீர்மானிக்கிறார். எப்போது வேலைக்குச் செல்ல வேண்டும், எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்கிறார். இந்த சுதந்திரம் அவருக்கு மனநிம்மதியைக் கொடுத்துள்ளது என்கிறார்.

இதன் மூலம் மாதம் சுமார் ₹60,000 வரை சம்பாதிப்பதாகவும், முன்பை விட இப்போது மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணர்வதாகவும் அவர் கூறுகிறார்.

இவரது கதை இணையத்தில் ஒரு ரீல்ஸ் வடிவில் பரவ, பலரும் அவரது தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.

"சபாஷ்! சரியான முடிவு" என்று ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபக்கம் ஐடி ஊழியர்கள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.

ஒரு பயனர், "நான் 18 வருஷமா ஐடி-ல இருக்கேன். மெயில்-ல முடிக்க வேண்டிய மீட்டிங், ரெண்டு நிமிஷ 'quick call'னு ஆரம்பிச்சு ரெண்டு மணி நேரம் போற கொடுமை, நைட்டுல வர்ற ப்ரொடக்‌ஷன் இஷ்யூனு எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கேன். என் பொறுமையை நினைச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு" என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆட்டோ ஓட்டும் பெண்
ஆட்டோ ஓட்டும் பெண்

மற்றொருவரோ, "அவர் சும்மா வேலையை விட்டிருக்க மாட்டார். நிச்சயம் 50 லட்சத்தில் இருந்து 2 கோடி ரூபாய் வரை பேங்க் பேலன்ஸ் சேர்த்திருப்பார்" என்று சொல்லி இருக்கிறார்.

இன்னொருவர், "எல்லாருக்கும் கடைசியில தேவை நிம்மதிதானே. அவங்க ஒரு எளிமையான, மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தேடிப் போயிருக்காங்க. அவங்க நல்லா இருக்கணும்" என்று மனதார வாழ்த்தியுள்ளார்.

இதுபோலவே, உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டத் தொடங்கி, 15 ஆண்டுகளில் 5 லாரிகளுக்கு உரிமையாளராகி, சுமார் 5 கோடி ரூபாய் சம்பாதித்த பிறகும், இன்னும் ஆட்டோ ஓட்டி வருவதை ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரே ஆச்சரியத்துடன் பகிர்ந்ததை மற்றொரு பயனர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User