மொபைல் போனில் பேசியபடி சென்ற கூலித்தொழிலாளி; மூடி திறந்திருந்த சாக்கடை குழியில் விழுந்து இறந்த சோகம்

Jul 03, 2026 - 14:31
0
மொபைல் போனில் பேசியபடி சென்ற கூலித்தொழிலாளி; மூடி திறந்திருந்த சாக்கடை குழியில் விழுந்து இறந்த சோகம்

மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் இரண்டு நாள்களுக்கு முன்பு செம்பூரில் மரம் விழுந்து 11 வயது பள்ளி மாணவன் உயிரிழந்தான். தற்போது சாக்கிநாகாவில் மழையின்போது அஸ்லாம் இசாக் ஷேக் என்ற 55 வயது நபர் திறந்திருந்த மேன்ஹோலில் (பாதாளச் சாக்கடை) விழுந்து உயிரிழந்தார். கூலித் தொழிலாளியான ஷேக், தனது மொபைலில் பேசியபடி சாக்கிநாகாவின் கைரானி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திறந்திருந்த மேன்ஹோலைச் (பாதாள சாக்கடை) சுற்றி பாதுகாப்பு வலை போன்ற இரும்புத் தடுப்பை அமைக்கும் பணியில் மாநகராட்சி நியமித்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஷேக் மேன்ஹோலை நெருங்கியபோது, அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை எச்சரிக்க சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தச் சத்தம் கேட்காமல் திறந்திருந்த சாக்கடை குழியில் ஷேக் விழுந்தார்.

சம்பவம் நடந்த இடம்

உடனே தொழிலாளர்கள் ஷேக்கை மீட்பதற்காக மேன்ஹோலுக்குள் ஏணியை இறக்கினர். ஆனால் அதற்குள் அவரை மழை நீர் அடித்துச் சென்றுவிட்டது.

அவரது குடை மற்றும் செருப்புகளை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நீரின் பலத்த ஓட்டம் காரணமாக அவர் எந்த திசையில் அடித்துச் செல்லப்பட்டார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. தீயணைப்புப் படையினர் வந்த பிறகு, சுவாசக் கருவிகளை அணிந்த மீட்புப் பணியாளர்கள் அருகிலுள்ள மற்றொரு வட்ட வடிவ மேன்ஹோல் வழியாக பாதாள சாக்கடைக்குள் இறங்கி தேடி ஷேக்கை வெளியில் எடுத்து ராஜா வாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, உதவி கமிஷனர் மற்றும் மூன்று பொறியாளர்கள் உட்பட நான்கு மாநகராட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய மாநகராட்சி கமிஷனர் அஸ்வினி பிடே உத்தரவிட்டுள்ளார்.

சாகிநாகாவில் திறந்திருந்த பாதாளச் சாக்கடையில் விழுந்து 55 வயது நபர் உயிரிழந்ததை அடுத்து, ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பணி நடைபெறும் இடத்தில் பின்பற்ற வேண்டிய கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கடுமையான குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் அஸ்வினி பிடே கூறினார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மும்பையில் 1,03,934 மேன்ஹோல்கள் இருக்கின்றன. இவற்றில் 96,383 மேன்ஹோல்களில் பாதுகாப்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன, 1,800 மேன்ஹோல்கள் முந்தைய சாலைப் பணிகளின் போது மூடப்பட்டன. 4,446 மேன்ஹோல்களை திறந்துள்ளது.

சரியாக ஒரு வாரத்திற்கு முன்புதான், கிங் சர்க்கிள் பகுதியில் வெள்ளம் பாதித்த இடத்தை மேயர் ரிது தாவ்டே ஆய்வு செய்து கொண்டிருந்தார். அவர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு சில அடிகள் தள்ளி மாநகராட்சி ஊழியர் ஒருவர் திறந்திருந்த சாக்கடைக்குள் இடுப்பளவு ஆழத்தில் விழுந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User