``ஸ்டாலின், பி.டி. ஆர்... தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப்பட்டார்களா?" - நடிகர் பிரகாஷ் ராஜ்

Sep 20, 2026 - 20:00
0
``ஸ்டாலின், பி.டி. ஆர்... தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப்பட்டார்களா?" - நடிகர் பிரகாஷ் ராஜ்

த.வெ.க ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ், `` முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையிலும் தோல்வியடைந்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவர்கள் தேர்தலில் தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப்பட்டார்களா, இதில் வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) போன்ற நடைமுறைகளின் தாக்கம் உள்ளதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஜனநாயகத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டு மதிக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் தற்போது இளைஞர்களை உள்ளடக்கிய புதிய அரசு அமைந்து சில மாதங்களே ஆகியுள்ளன. தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த ஜனநாயக அரசுக்குச் செயல்படக் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகவும், மின்வெட்டு மற்றும் விவசாயிகள் பிரச்னைகளுக்காகவும் போராடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், ஆட்சி அமைந்த உடனே அவசரப்பட்டு விமர்சனங்களை வைப்பது சரியாக இருக்காது.

முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பயணத்தின் போது அவர் தனது நண்பர் அஜித்தைச் சந்தித்தது குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், பயணம் சென்றதன் முக்கிய நோக்கமான முதலீடுகளை அவர் ஈர்த்துள்ளாரா என்பதையே முதன்மையாகப் பார்க்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான கோடிகள் முதலீடாகக் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் அடுத்தகட்ட மாற்றங்கள் மற்றும் பலன்களைப் பொறுத்திருந்து பார்க்க நமக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைகள் (SIR) மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாக்கு உரிமைகள், 'வீட்டில் இல்லை' அல்லது 'இடமாற்றம்' என்ற காரணங்களைக் காட்டி நீக்கப்படுவது தவறான அணுகுமுறையாகும். நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் பதவிகளில் இருந்தவர்களின் பெயர்களே பட்டியலில் விடுபடும் சூழல் நிலவுவது, இந்த நடைமுறையின் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் அதன் வடிவத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். மக்கள் தொகையைக் காரணியாக வைத்துத் தொகுதிகளை மறுவரையறை செய்வதை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மாநிலத்தில் திமுக, தவெக ஆட்சி அல்லது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்கள் நலன் மற்றும் மாநிலத்தின் உரிமையைப் பாதுகாக்கத் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டியது அவசியமாகும். தொகுதி மறுவரையறை (Delimitation) தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கணிசமாகக் குறைத்துவிடும். மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் தங்களுக்குரிய உரிமைகளைப் பேசிச் சுமுகமான தீர்வைக் காண வேண்டும். கர்நாடக அரசு தனக்கான நிலைப்பாட்டை எடுத்தாலும், இரு மாநில மக்களும் இந்தியர்கள் என்ற முறையில் பேசி முடிவெடுக்க அரசுகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

 பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

திமுக இனி 20 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கே வர முடியாது போன்ற அரசியல் கட்சிகளின் தொடர் அறிக்கைகளை ஒரு கால்பந்து போட்டியைப் போலப் பார்ப்பதை விட்டுவிட்டு, மக்கள் நலன் சார்ந்த பணிகள் நடக்கின்றனவா என்பதை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் பணியைச் செய்ய வேண்டும். இளைஞர்களும் சாமானிய மக்களும் அரசின் செயல்பாடுகளைக் கேள்விகேட்டு ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். உடனடி எதிர்ப்புகளைத் தவிர்த்து மக்கள் தீர்ப்பை மதிப்பதே ஜனநாயகப் பண்பாகும்." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User