'நந்திகிராமில் ஒரு நாள்' மேற்கு வங்க இடைத்தேர்தல் களத்தில் நேற்று 'பரபர' காட்சிகள் - என்ன நடந்தது?
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதி நேற்று (செப்டம்பர் 18) ஒரே நாளில் பல ட்விஸ்ட்களைப் பார்த்துவிட்டது.
இது மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் தொகுதி ஆகும்.
கடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், சுவேந்து அதிகாரி பவானிபூர், நந்திகிராம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே வெற்றியும் பெற்றார்.
பவானிப்பூர் தொகுதி...
பவானிபூர் தொகுதி முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சொந்தத் தொகுதியாகும்.
2011-ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றே மேற்கு வங்கத்தை ஆட்சி செய்திருக்கிறார் மம்தா பானர்ஜி.
2021-ஆம் ஆண்டு பவானிபூர் தொகுதியின்றி வேறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்று மம்தாவிடம் சவால் விட்டார் சுவேந்து அதிகாரி.

சவாலை ஏற்று சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் போட்டியிட்டார் மம்தா பானர்ஜி. ஆனால், அவருக்கு அங்கு கிடைத்தது என்னவோ தோல்வி.
இதனால், 2021-ஆம் ஆண்டு பவானிபூர் தொகுதியின் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று, தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார் மம்தா பானர்ஜி.
அந்தளவிற்கு மம்தா பானர்ஜிக்கு பவானிபூர் தொகுதியில் செல்வாக்கு உள்ளது. அதேபோல, மேலே குறிப்பிட்ட சம்பவத்தில், ஒரு முதலமைச்சரே தோல்வியைத் தழுவினார் என்றால் நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கு உள்ள செல்வாக்கையும் தவிர்த்துவிட முடியாது.
இந்த இரண்டு செல்வாக்குகள் மத்தியில் தான் ஊசலாடுகிறது நந்திகிராம் தேர்தல்.
சுவேந்து அதிகாரியும், பவானிபூர் தொகுதியும்!
ஆம்... சுவேந்து அதிகாரியால் பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடியாது. அப்படிச் செய்தால், அந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் நின்று, மம்தா பானர்ஜி வெற்றியை அள்ளிவிடுவார்.
அதன் பிறகு, சுவேந்து அதிகாரிக்கு ஆட்சியிலும், சட்டமன்றத்திலும் குடைச்சலை இன்னும் கூட்டுவார் மம்தா. இதனால், பவானிபூர் தொகுதியை ‘சேஃப்’ பாகத் தன்னிடமே வைத்துக்கொண்டு, நந்திகிராம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
2016, 2021, 2026 எனத் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் சுவேந்து அதிகாரிக்கு வெற்றியைத் தந்த தொகுதி நந்திகிராம். இதனால், இந்தத் தொகுதியும் தன் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் சுவேந்து.

சுவேந்து அதிகாரியின் சந்திப்பு
நந்திகிராம் தொகுதியில் மம்தாவின் திரிணாமுல் சார்பாக சஞ்சிதா பிரதான் டே நிறுத்தப்பட்டார். இவர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஆவார்.
இவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) சுவேந்து அதிகாரியை ரகசியமாகச் சந்தித்தார். இதையடுத்து நேற்று தன்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிட்டார்.
நேற்று காலை, திரிணாமுல் காங்கிரஸில் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டுள்ளதால், அவர்களுடைய சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். இதையடுத்து மம்தா தரப்பு திரிணாமுலுக்கு ‘மம்தா அனைத்து இந்தியா திரிணாமுல் காங்கிரஸ்’ என்று பெயரிடப்பட்டது.
கூடவே, ‘கால்பந்தாடும் வீரர்’ சின்னம் கொடுக்கப்பட்டது.
கட்சியின் பெயர் மாற்றம் மற்றும் சின்னம் மாற்றத்தைக் கூறியே சஞ்சிதா பிரதான் டே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதில் மம்தாவிற்கு நெருக்கடி. இதனால், காங்கிரஸிற்குத் தன்னுடைய ஆதரவை நேற்று அறிவித்தார் மம்தா.
காங்கிரஸ் வேட்பாளர் கைது
மம்தா ஆதரவு தெரிவித்த ஒரு சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது 2007-ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட ஒரு கொலை வழக்கில்.
இந்தப் புகாரை அளித்தது யார் என்று பார்த்தால், அதில் ஒரு ட்விஸ்ட். இது மம்தாவின் எதிர் தரப்பு திரிணாமுல் காங்கிரஸ் கொடுத்த வழக்காகும்.
ராகுல் காந்தி எதிர்ப்பு
இதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில், “நந்திகிராம் இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டது தற்செயலானது அல்ல. இது அரசியல் பழிவாங்கல், ஜனநாயகப் படுகொலை!
நேர்மையான தேர்தல்களில் பாஜகவிற்கு நம்பிக்கையே இல்லை. அதனால் தான் சில நேரங்களில் வாக்குத் திருட்டு, சில நேரங்களில் ஆட்சிகளைத் திருடுவது, சில நேரங்களில் கட்சிகளையே திருடுவது என ஏதேனும் ஒரு வழியில் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளப் பார்க்கிறது.
அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. தேர்தல் களம் என்ற ஒன்று இருப்பதே முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
காங்கிரஸ் பயப்படவும் செய்யாது, பணியவும் செய்யாது!
நாங்கள் போராடுவோம்—வெற்றியும் பெறுவோம்!” என்று பதிவிட்டிருந்தார்.
ரிதப்ரதா பானர்ஜி பதில்
இதற்கு மம்தாவின் எதிர்ப்பு தரப்பு ஜனநாயக திரிணாமுல் காங்கிரஸின் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி, “நந்திகிராம் இடைத்தேர்தலுக்காகப் போட்டியிடும் மிலன் பிரதான் மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் தான், ஜனநாயகத் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாங்கள் அவர் மீது புகார் அளித்துள்ளோம். தேர்தல் நேரத்தில் அவருக்கு எதிராக உள்ள பிடியாணையை நிறைவேற்றுவது சட்டப்பூர்வமாகக் கட்டாயமாகும்.
மாநிலக் காங்கிரஸ் தலைமை, மிலன் குறித்த அசல் விவரங்கள் எதையும் ராகுல் காந்தியிடம் சொல்லவில்லை போலும்” என்று ராகுல் காந்திக்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.
இத்தனை கட்சிகளைத் தாண்டி வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி நந்திகிராம் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறுமோ?
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)