"ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

Sep 20, 2026 - 13:30
0
"ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில்‌ பேரறிஞர் அண்ணாவின் 118- வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், தாதகாப்பட்டியில் நேற்றிரவு நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், " த.வெ.க அரசு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தயவால் உள்ளது. இது நிலையில்லாத ஆட்சி. இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்.

எடப்பாடி பழனிசாமி

மக்களைப் பற்றி சிந்திக்காத அரசாங்கம் இது. மக்களுக்கு நல்ல குடிநீர், சாலை வசதி கொடுங்கள். விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுங்கள். இந்த பிரச்னைகளை பற்றி கவலை கொள்ளாமல், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதிலேயே குறியாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க, தி.மு.க மாறி மாறி ஆட்சி செய்துள்ளோம். எப்போது ஆட்சி செய்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தோம். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நலனுக்கு மட்டுமே செயல்படுகின்றனர்.

கட்சி தொடங்கியே 3 வருடம் தான் ஆகிறது. ஆனால், அ.தி.மு.க- வைப் பார்த்து தீர்ந்து போன கட்சி என்று சொல்கின்றனர். நான் கிராமத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவன். மக்களுக்கு என்ன பிரச்னை என்று உணர்வு பூர்வமாகப் புரிந்து கொண்டவன். நல்ல சாலை, குடிநீர், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் போல், எந்த ஆட்சியிலும் கொண்டு வரமுடியாது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவைப் போன்று பல கட்சிகளுக்குச் சென்று வந்தவர்கள் நாங்கள் இல்லை. அவர் தி.மு.க-வில் இருந்தார், பின்னர் வி.சி.க- வுக்கு போனார். பின்னர், என்னிடம் வந்து அ.தி.மு.க-வில் துணை பொதுச் செயலாளர் பதவி வேண்டும் என கேட்டார்.

எடப்பாடி

அ.தி.மு.க- வில் கட்சி பதவிகளை விற்பனை செய்வதில்லை. உழைப்பவர்களுக்கு தான் பதவி கிடைக்கும் என்று கூறினோம். அதனால், தவெகவிற்கு சென்று, பின்னர் அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். இப்படி பல கட்சி மாறிய ஆதவ் அர்ஜூனாவுக்கு, அ.தி.மு.க பற்றி பேச தகுதியில்லை. எந்த கட்சியிலும் நிலைத்து இருக்காத அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஒரு வேடந்தாங்கல் பறவையாக உள்ளார். கரூரில் த.வெ.க தேர்தல் பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களை பார்க்கக் கூட போகவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. கட்சி அலுவலகத்தை 15 நாள்களுக்கு மூடி விட்டு சென்று விட்டனர். வீர வசனம் பேசிய ஆதவ் அர்ஜூனா வௌிமாநிலத்திற்கு சென்று பதுங்கி விட்டார்" என்றார் .

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User