`பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி' பாஜக தலைவர்கள் கண்டனம்! - என்ன நடந்தது?
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ஸ்டாண்டப் காமெடியன் புல்கித் மணி ஆகியோர் கிண்டல் செய்யும் வகையில், பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசுவது போல நடித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ``நீங்கள் சாதாரணமாக நண்பரின் வீட்டிற்குச் செல்லவில்லை. இந்தியப் பிரதமர் வெறும் நட்பை மட்டும் வளர்க்கும் பணியில் ஈடுபடக் கூடாது. அவர்களுக்கு நட்பில் எந்த நன்மையும் இல்லை.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே அவர்களின் முதன்மையான கடமை" என்று கூறி, மத்திய அரசின் வெளியுறவுத் தூதரக அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பா.ஜ.க தலைவர்கள் பலரும் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ``ராகுல் காந்தி பெண்களை இழிவுபடுத்தியுள்ளார். நாகரிகமும் சரியான சிந்தனையும் உள்ள எந்தவொரு நபரும் இது போன்ற மூன்றாம் தர அருவருப்பான செயல்களை ரசித்திருக்க மாட்டார்கள்.
ஆனால், ராகுல் காந்தி அவர்களுடன் மேடையைப் பகிர்ந்துகொண்டு உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தார். ராகுல் காந்தியால் ஆதரிக்கப்படும் இது போன்ற பண்பாடற்ற கலாசாரமே, அவராலும் காங்கிரஸ் கட்சியாலும் இளைஞர்களைக் கவர முடியாமல் போனதற்குக் காரணம். காங்கிரஸின் இந்தத் தோல்வியை அவர்தம் சொந்தக் கட்சித் தலைவர் சசி தரூரே ஒப்புக்கொண்டுள்ளார். ராகுல் காந்தியின் கசப்பான வெறுப்பு அரசியலின் காரணத்தினாலேயே, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க (DUSU) தேர்தலில் காங்கிரஸின் மாணவர் பிரிவான NSUI விரட்டியடிக்கப்பட்டது. கோமாளிகளையும் இதுபோன்ற மலிவான காட்சிகளையும் ஆதரிக்கும் ராகுல் காந்தியை ஒரு தீவிரமான அரசியல் தலைவராக எடுத்துக்கொள்ள முடியாது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, "ராகுல் காந்தியின் பேச்சுத் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவரது கருத்துகள் இந்திய அரசியலின் கண்ணியத்திற்கு ஏற்பட்ட கறை. இது போன்ற மொழிகள் இந்தியாவின் பண்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை. மக்கள் அரசியல் தலைவர்களின் வார்த்தைகளையும், மதிப்பீடுகளையும், மனநிலையையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதனால் தான் காங்கிரஸ் கட்சியை வாக்காளர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)