`6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழுமா?'- அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு அமைச்சர் மரியவில்சனின் பதில் என்ன?

Jul 18, 2026 - 10:33
0
`6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழுமா?'- அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு அமைச்சர் மரியவில்சனின் பதில் என்ன?

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்ரீ வைகுண்டத்தில் நடந்த பொதுகூட்டத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் என உரையாற்றியிருக்கிறார்.

இது தொடர்பான கேள்வி தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர், ``கடந்த 15 முதல் 16 நாள்களாக முதலமைச்சர் அனைத்துத் துறை ரீதியிலான அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களை நேரில் சந்தித்துத் தீவிர ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

தினந்தோறும் சராசரியாக 6 முதல் 7 மணி நேரம் வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டு, பல முக்கிய ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அமைச்சரவை கூட்டமும் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. வரப்போகும் ஆகஸ்ட் முதல் வாரத்தில், தவெக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த ஆட்சி ஆறு மாத காலத்தில் கவிழ்ந்துவிடும், அமைச்சர்கள் எல்லாம் எங்களிடம் வந்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பேசிவருவது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன் இன்னும் ரியாலிட்டிக்கு வரவேயில்ல்லை, அவருக்கு உண்மை என்னவென்று தெரியவில்லை. பாவம், அதனால்தான் அவர் இன்னும் மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல் இப்படிப் பேசி வருகிறார். இந்த உண்மை அவருக்கும் புரியவில்லை, அவர் தலைமைக்கும் புரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் அவர்கள் தலைவணங்க பழக வேண்டும்.

கடந்த 50 முதல் 55 நாள்களில் அரசு எடுத்து வரும் அனைத்துத் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் மக்கள் 100% வரவேற்கிறார்கள். மக்கள் அனைவரும் இந்த ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை துறை ரீதியாக நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் போது, எதிர்க்கட்சியினரும் இதனைச் சந்தோஷமாக வரவேற்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User