Doctor Vikatan: யாரிடமும் எதற்கும் கோபமே படாத நண்பன் - நல்ல குணமா... மனநல சிகிச்சை தேவையா?!

Jul 30, 2026 - 08:00
0
Doctor Vikatan: யாரிடமும் எதற்கும் கோபமே படாத நண்பன் - நல்ல குணமா... மனநல சிகிச்சை தேவையா?!

Doctor Vikatan: என் நண்பனுக்கு 40 வயதாகிறது. அவனுக்கு எப்போதும், எந்த விஷயத்துக்கும் கோபமே வருவதில்லை. யாராவது அவனை அவமானப்படுத்தினாலோ, காயப்படுத்தினாலோகூட கோபப்பட மாட்டான்.

நியாயமான விஷயங்களுக்குக்கூட கோபப்படாத அவனை எப்படிப் புரிந்துகொள்வது... அவனுக்கு மனநல சிகிச்சை தேவையா? 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

 மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் நியதி. இது மனவியலுக்கும் பொருந்தும். எந்த உயிரினமும் ஜடம்போல இருத்தல் ஆகாது. சூழலுக்கேற்ப ரியாக்ட் செய்ய வேண்டும். அதுதான் அது உயிருள்ள படைப்பு என்பதற்கான அடையாளமும்கூட.

உங்கள் நண்பர் எதற்கும் கோபப்பட மாட்டார் என்று தெரிந்து, அவரின் எதிராளி அவரிடம் இன்னும் சற்று கோபமாகப் பேசலாம், கத்தலாம். யாரையும் தொந்தரவு செய்யாமல் இருக்கும் ஓர் உயிரினத்தை நாம் வேண்டுமென்றே சீண்டினால் அது நம்மைத் தாக்க முயலும்.

ஐந்தறிவு ஜீவன்களுக்கும் இருக்கக்கூடிய இயற்கையான, இயல்பான குணம் அது. பாக்டீரியாவோ, வைரஸோகூட சூழலுக்கேற்ப, தன் வாழ்வாதாரத்துக்காகத் தன்னை மாற்றிக்கொண்டே போவதைக் கேள்விப்படுகிறோம் அல்லவா? அப்போதுதான் அதனால் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

எதற்குமே கோபப்படாத உங்கள் நண்பரின் குணம் சரியா என்றால் சரியானதல்ல என்பதே பதில். அநீதி கண்டு பொங்க வேண்டும். நியாயத்துக்கெதிரான செயல்கள் நடக்கும்போது எதிர்க்க வேண்டும். அப்படியெல்லாம் செய்வதுதான் மனித இயல்பு. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பொங்கிய பாரதிக்கும், அஹிம்சை வழியில் போராடிய காந்திக்கும்கூட கோபம் இருந்ததுதானே....

கோபத்தை வன்முறையாகவோ, ஆக்ரோஷமாகவோ மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை.

கோபப்படாத, அமைதியான குணம்  நல்ல பண்பு என உங்கள் நண்பர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்வார் என்றே தோன்றுகிறது. கோபப்பட வேண்டும் என்றதும் வன்முறையில் இறங்க வேண்டும் என்று அர்த்தமில்லை. நமக்குத் தெரிந்து ஒரு தவறு நடக்கும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அளவுக்கு கோபம் இருக்க வேண்டியது அவசியம். 

கோபத்தை வன்முறையாகவோ, ஆக்ரோஷமாகவோ மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை. அழுத்தமான வார்த்தைகளால் பதியவைக்கலாம். உறுதியாகச் சொல்லலாம். மாற்றுக் கருத்துகள் வருமோ, எதிராளிகள் என்ன சொல்வார்களோ, செய்வார்களோ என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.

நமக்குச் சரியென பட்டதைச் சொல்லும் தைரியமும் தவறென படுவதைச் சுட்டிக்காட்டவும் தேவையான அடிப்படை கோபம் இருப்பதுதான் சரி. இதை உங்கள் நண்பரிடம் எடுத்துச் சொல்லிப் புரியவையுங்கள். இதற்கு சிகிச்சையெல்லாம் தேவைப்படாது. பேசிப் புரியவைத்தாலே போதும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User