திருச்செந்தூர்: `சுவாமி தரிசனமா, ரூ.4,000 ஜிபே.!' - அமைச்சரிடமே வசூல் வேட்டை நடத்திய அர்ச்சகர்கள்!

May 29, 2026 - 11:32
0
திருச்செந்தூர்: `சுவாமி தரிசனமா, ரூ.4,000 ஜிபே.!' - அமைச்சரிடமே வசூல் வேட்டை நடத்திய அர்ச்சகர்கள்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர், அருள்மிகு   சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும்  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  ரமேஷ் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ரமேஷ்

கருப்பு நிற டி.சர்ட் அணிந்தும், முகத்தில் மாஸ்க் மாட்டிக் கொண்டும்  வந்திருந்தார்.  அப்போது அமைச்சர் மட்டும் தனியாக கோயில் வளாகத்திற்குள் சென்று, அங்கிருந்த அர்ச்சகர்களிடம் “சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு?” என கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அர்ச்சகர்கள், “ஒருவருக்கு 1,000 வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.  தொடர்ந்து உதவியாளர்களுடன் சேர்த்து  4 பேருக்கு ரூ. 4,000 தொகையை அர்ச்சகர்கள் பெற்றதாகவும், அந்த தொகை ஜி-பே  மூலம் பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் யார் என்பது தெரியாமலேயே அர்ச்சகர்கள் இவ்வாறு பணம் பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அமைச்சர் கோயிலின் அன்னதான கூடத்திலும் ஆய்வு மேற்கொண்டார்,. அங்கு இருந்த அதிகாரிகளிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.  தொடர்ந்து இணை ஆணையர் அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ரமேஷ்

அப்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பல இடங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் சிலரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் ஆய்வு முடித்து வெளியே வந்த பிறகு அவர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பார் என்பது தெரியவரும். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திடீரென ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சரிடமே பணம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User