”அடுத்த சட்டமன்றத் தொடரில் Dance Performance இருக்கும்” - முதல்வர் விஜய்யைச் சாடிய உதயநிதி

Jun 28, 2026 - 19:01
0
”அடுத்த சட்டமன்றத் தொடரில் Dance Performance இருக்கும்” - முதல்வர் விஜய்யைச் சாடிய உதயநிதி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகளில் இரண்டு திமுக நிர்வாகிகளின் இல்லத் திருமணம் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் பேசியதாவது, ''இப்போது அமைந்திருக்கக்கூடிய இந்த சோபா மாடல் ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் அடிச்சு, துவைக்கப்பட்டு, நொறுங்கி கிடக்கின்றது.

ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் புரிஞ்சுக்கிட்டு இருக்குறாங்க. இன்னைக்கு இந்த அரசுடைய தவறுகளை, சறுக்கல்களை எல்லாம் இளைஞர்கள் தட்டிக்கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அப்படி தட்டிக்கேட்கிற இளைஞர்களை, நம்முடைய கட்சியினரைக் கைது செய்யுற வேலையை சோபா மாடல் அரசு ஆரம்பிச்சிருக்காங்க.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்ள நிச்சயம் நமக்கு நிறைய வழக்கறிஞர்கள் தேவை. அந்த வகையிலே இந்த மேடையிலே நமக்கு இரண்டு வழக்கறிஞர்கள், அதுவும் ஜோடியான வழக்கறிஞர்கள் கிடைத்திருக்கின்றனர். ​

தூய சக்தி, தூய சக்தினு சொன்னவங்க ஆட்சிக்கு வந்ததும் என்ன பண்ணாங்கன்னு எல்லோரும் தொலைக்காட்சில பார்த்திருப்பீர்கள். ஆட்சிக்கு வந்த அஞ்சாவது நிமிஷமே குதிரை பேரத்தை ஆரம்பித்தனர்.

பிற கட்சிகளுக்கு முதலில் சோபா போகும். சோபாவிற்குப் பின்னாடியே துரத்தி கொண்டே முதலமைச்சர் போவார். அப்புறம் முதலமைச்சர் பின்னாலேயே அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தோடு கியூவில் செல்வதைப் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

இந்தக் காட்சிதான் தமிழ்நாட்டுல ஒரு மாசமாக ரிப்பீட் மோடுல தினமும் ஒரு செய்தியாக வருகிறது. தமிழ்நாட்டுல எங்கு பார்த்தாலும் கரண்ட் கட்டுதான். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இந்த நேரம் வரைக்கும் இந்த மண்டபத்தில் கரண்ட் கட் ஆகாமல் இருக்கு.

ஒரத்தநாடு பகுதியில் கிராமங்களில் நள்ளிரவுகளில் பவர் கட் ஆவது தொடர்கதையாக இருக்கு. விவசாயிகள் இதனால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க நம்முடைய தலைவர் முதலமைச்சரா இருந்தப்போ 2021 முதல் 2025 வரைக்கும் சரியாக ஜூன் 12ம் தேதி மேட்டூர்ல அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணிய திறந்து வச்சார். ஆனால் இந்த அரசு, மேட்டூர் அணையை இன்னும் திறக்கல.

விஜய்
விஜய்

குறுவை சாகுபடிக்கு அரசு அறிவிச்ச ஸ்பெஷல் பேக்கேஜ் பத்தாதுன்னு விவசாயிகள் அத்தனை பேரும் சாலைகளில் போராடுகிறார்கள். ஆனால் முதலமைச்சர், தி.மு.க தூண்டுதலால் விவசாயிகள் போராடுகிறார்கள் என்று விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார்.

தேர்தல் பிரசாரத்தில், 5 ஏக்கர் வரைக்கும் பயிர்க்கடன் தள்ளுபடின்னு வாக்குறுதி கொடுத்தார். அதைச் செய்யவில்லை. இன்றைக்கு தமிழ்நாட்டின் சட்டமன்ற ஒழுங்கு எந்த அளவில் இருக்குன்னு உங்களுக்குத் தெரியும். ஒரு அதலபாதாளத்துல, படுகுழியில் ஆட்சியாளர்கள் தள்ளி இருக்கிறார்கள்.

இதை சட்டமன்றத்தில் நாங்கள் பேசினோம். அதற்கு பதில் சொல்லக்கூடிய முதலமைச்சர் ஒரு பதிலும் சொல்லக் கிடையாது. ஆளுங்கட்சியினர் சட்டமன்றத்தில் என்னென்ன கூத்தடிச்சாங்கன்னு நீங்கள் தொலைக்காட்சியில பார்த்திருப்பீர்கள். இது சட்டமன்றமா? இல்ல சினிமா தியேட்டரா?

இல்ல ஏதாவது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டோமான்னு எங்களுக்கெல்லாம் சந்தேகம். சட்டமன்றத்தின் தரத்தையே ஆளுங்கட்சியினர் குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதற்கு எடுத்தாலும் திமுகதான் காரணம் அப்படிங்கறதை ரெடிமேட் பதிலாக இன்றைய ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்

நம் தலைவர் செஞ்ச நல்ல பணிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் இந்த ஆட்சியாளர்கள் எதாவது பிரச்னை என்றால் திமுகதான் காரணம் என்கிற ரெடிமேட் பதிலைச் சொல்கிறார்கள். நம் தலைவரைச் சிறுமைப்படுத்தும் நோக்கத்தோடு, தலைவரைத் தேடிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசினார்.

தலைவர் என்னைக்கும் தேடிக் கண்டுபிடிக்கிற இடத்துல இருந்ததே கிடையாது. மிசா டைம்ல தலைவரைத் தேடி போலீஸ் கோபாலபுரம் இல்லத்திற்கு அவரைக் கைது செய்வதற்கு வந்தனர். அப்போது, கலைஞர், என்னுடைய மகன் கழக நிகழ்ச்சிக்காக வெளியூரில் இருக்கிறார் வந்ததும் நானே உங்ககிட்ட அனுப்பி வைக்கிறேன் என்று பதில் சொன்னதுடன் வந்ததும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வச்சார்.

​இன்னைக்கு மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களின் மூலமாக தமிழ்நாடு முழுக்க தலைவர் நிறைந்திருக்கிறார். மக்களோடு மக்களாக இருக்கிறார். பெரம்பூர் தொகுதி மக்கள், நாங்கள் ஒருத்தரைத் தெரியாத்தனமா ஜெயிக்க வச்சிட்டோம். அவர் எங்க போனார்? யாராவது பார்த்தீங்களா? என்று கேட்டு புலம்புகின்றனர்.

இந்த ஆட்சியில ஒட்டுமொத்த தமிழ்நாடும் மின்சாரத்தைத் தேடிட்டு இருக்கு. கடந்த ஐந்து வருஷம் நல்லா இருந்த சட்டமன்ற ஒழுங்கை மக்கள் தேடிட்டு இருக்கிறார்கள். ஆகவே, கிண்டல் பண்றதா நினைச்சு முதலமைச்சர், அவரை அவரே இன்னைக்கு எக்ஸ்போஸ் பண்ண ஆரம்பிச்சிருக்காரு.

இன்னும் அவர் சட்டமன்றத்தில் டான்ஸ் மட்டும்தான் ஆடலை. அடுத்த கூட்டத்தொடரில் நிச்சயம் ஒரு டான்ஸ் பெர்ஃபார்மன்ஸும் இருக்கும்கிறது எங்களுடைய எதிர்பார்ப்பு.

தமிழ்நாடு இப்போது பெரிய பேரிடரில் மாட்டிக்கிட்டு இருக்கு. அதிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. நாம் பார்க்காத வெற்றியும் கிடையாது, தோல்வியும் கிடையாது. கட்சியையும் தலைவரையும் மனசில் வச்சு, நம் பணிகளை வகுக்க வேண்டும்'' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User