அமைச்சர் சரத் குமார் வீடியோ: ``விளக்கமளிக்க வேண்டும்; இல்லையெனில் பதவி விலக வேண்டும்" - தமிழிசை

Jun 28, 2026 - 19:01
0
அமைச்சர் சரத் குமார் வீடியோ: ``விளக்கமளிக்க வேண்டும்; இல்லையெனில் பதவி விலக வேண்டும்" - தமிழிசை

தவெக அமைச்சர் சரத் குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது.

இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``மயிலாப்பூரில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் அவர்களைச் சென்றடைவதற்காகவும் மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாடு முதல்வர் போலியோ சொட்டு மருந்து தினத்தைத் தொடங்கி வைத்தது பாராட்டக்குறியது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தருவதை எதிர்த்து தி.மு.க-விலிருந்து வெளியேறி, தொண்டர்கள் தீக்குளித்த சம்பவங்கள் நடந்தும், இறுதியில் அவர்களின் ஆன்மாவை மிதித்துவிட்டு மீண்டும் தி.மு.க-விடமே வைகோ கூட்டணி வைத்தார்.

அவர் எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகி மீண்டும் தேர்தலை எதிர்க்கொள்வார்களா? இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு... இதுதவிர, வைகோவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு தொண்டர்களை கிள்ளுக்கீரையைப் போல பயன்படுத்துகிறார்.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய இரண்டையுமே சமமாகத்தான் எதிர்க்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, குதிரை பேரம் நடத்துபவர்களே அதைப்பற்றிப் பேசுவது வியப்பாக இருக்கிறது.

40 நாட்களுக்குள் அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வதால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றுவது போன்ற இந்துக்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்குத் தற்போதைய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

அரசு மருத்துவர்கள் உயர் படிப்பு முடித்த பின் மீண்டும் பணிக்குத் திரும்பாத பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் லஞ்சத்தை ஒழிப்பதாக சுகாதார அமைச்சர் கூறினாலும், ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பிடிபட்ட 54 லட்சம் தொகையில் 24 லட்சம் ரூபாய் GPay மூலமாகப் பெறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் சிறு வணிகர்கள் கூடப் பயனடையும் வேளையில், தமிழகத்தில் லஞ்சம் என்பது 'டிஜிட்டல் ஊழலாக' மாறியுள்ளது கவலைக்குரியது. இதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

தமிழக அமைச்சர் ஒருவர் பொதுவெளியில் செல்போனை வைத்து ஏதோ ஒரு பொடியைச் செய்ததை சர்வதேச குழந்தை நல மருத்துவர்களே வியந்து பார்க்கிறார்கள். முதலமைச்சர் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற சிக்கல்களுக்கு முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அது மருத்துவப் பொடியா அல்லது போதைப்பொருள் கலந்ததா என்பதை முதலமைச்சர் ஆராய வேண்டும். இளைஞர்களுக்குத் தவறான முன்மாதிரியாக இருக்கும் அந்த அமைச்சர், உண்மை விளக்கத்தை அளிக்க வேண்டும், இல்லையெனில் பதவி விலக வேண்டும்'' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User