`எங்க வீட்டுல சோலார் செட்அப் இல்ல; பவர் கட் தொடர்பா நான் பேசினது தற்குறித்தனமா?'- மாஸ்டர் மகேந்திரன்
தமிழகம் கடந்த சில தினங்களாகச் சந்தித்து வரும் பவர்கட் பிரச்னை தொடர்பாக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளாக, சமூக ஊடகங்களில் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
'இவ்ளோ நாள் கரன்ட் கட் இல்லாம இருந்தீங்கல்ல, ஒரு ஆறு மாசம் இந்தப் பிரச்னை வந்தா எதிர்கொண்டுட்டு போங்களேன். இல்லைன்னா சோலார் மாதிரியான வேற ஆப்ஷன்களுக்குப் போயிருக்கணும். சூரிய ஒளியில இருந்து கரன்ட் எடுக்கறது எப்படிங்கிறது எனக்குத் தெரியும்' என்பதுதான், அந்த வீடியோவில் இருக்கும் கன்டென்ட்
'தற்குறிகள் இப்படித்தான் பேசுவாங்க' என்பதில் தொடங்கி... 'நாட்டாமை படத்தில் நடித்தபோது இருந்த மனநிலை இன்னும் அப்படியே இருக்கு. இந்த விவகாரத்தின் தீவிரம் புரியாம பொதுவெளியில் இப்படி பேசிட்டுத் திரியுறார்' என்பது வரை கடந்த இரு தினங்களாக வலைதளங்கள் பக்கம் போனால்... ஒரே வசவுதான்.

'ஏன் அப்படிப் பேசுனீங்க... சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சிக்கிறாங்களே, பார்த்தீங்களா' என மகேந்திரனையே தொடர்பு கொண்டு கேட்டோம்.
''முதல்ல ஒரு விஷயத்தை நான் தெளிவு படுத்திடுறேன். நான் இந்த நிமிடம் வரை எந்தக் கட்சியிலயும் உறுப்பினரா இல்லை. ஏதாவது ஒரு கட்சியில போய்ச் சேரணும்கிற எண்ணமும் எனக்கு இப்போதைக்கு இல்லை. அதேபோல பவர் கட்டுக்கு காரணம்னு யாரையும் நான் குறிப்பிட்டும் பேசலை.
சில நொடிகள் போகிற ஷார்ட்ஸ்ல இதுதான் பிரச்னை. முன்னாடியும் பின்னாடியும் என்ன பேசியிருக்காங்கன்னு தெரியாது. அந்த பத்து இருபது நொடியில பேசறதை வச்சு அவங்கவங்க எதையாவது நினைச்சுகிட்டு அப்படியே பரப்பி விட வேண்டியது.
நான் சொல்ல வந்த விஷயம் இதுதான். மின்சாரத் தேவை அதிகமாகிற போதுதான் பவர் கட் பிரச்னை வருது. அந்த தேவையைச் சமாளிக்க என்னென்ன வழியெல்லாம் இருக்கோ அதைத்தான் பார்க்கணும். பேச்சு அப்படி திரும்பினப்பதான் வெயில் அதிகம் அடிக்கிற நம்மூர்ல சோலார் மின்சாரம் இருக்கேனு சொன்னேன்.
சோலார் மின்சாரம் தயாரிச்சோம்னா அரசாங்கத்துல மானியமெல்லாம் தர்றாங்கனு கேள்விப்பட்டேன். அந்த வழியை நாம முன்னாடியே தேர்ந்தெடுத்திருந்தோம்னா இப்படி பிரச்னையைச் சந்திக்க வேண்டிய நிலை வந்திருக்காதேங்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

பக்கத்து மாநிலமான கேரளாவுல கொச்சின் ஏர்போர்ட் முழுக்க முழுக்க சோலார் சிஸ்டத்துல இயங்குது. அங்கெல்லாம் அது சாத்தியமாகுறப்ப இங்க ஏன் முடியாதுங்கிறதுதான் என்னுடைய கேள்வி.
ஆனா அதை தப்பா புரிஞ்சுகிட்டு, என் வீட்டுல சோலார் செட் அப் வச்சிருக்கேன்னும், திமிரா பேசறேன்னும் திட்டித் தீக்குறாங்க. தற்குறின்னு சொல்றாங்க.
நீங்களே சொல்லுங்க, நான் பேசினது தற்குறித்தனமா அல்லது தப்பா புரிஞ்சுகிட்டவங்க தற்குறியா? அதனால நான் என் கருத்துல உறுதியா இருக்கேன். அதுல இருந்து பின்வாங்குறதா இல்லை'' என்கிறார் இவர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)