தேனிலவுக்கு குடும்பத்தையே அழைத்து வந்த கணவன்! - விவாகரத்து கேட்கும் மனைவி

Jun 10, 2026 - 13:02
0
தேனிலவுக்கு குடும்பத்தையே அழைத்து வந்த கணவன்! - விவாகரத்து கேட்கும் மனைவி

திருமணமானவுடன் கணவன் மனைவி தம்பதியாக தேனிலவு செல்வது வழக்கம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மிகவும் அபூர்வமாக இத்தேனிலவுக்கு குடும்பத்தினரும் சேர்ந்து செல்வது நடக்கும்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள ராம்ராஜ் என்ற பகுதியை சேர்ந்த சாதனாவிற்கு டெல்லியை சேர்ந்த விவேக் என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதி தேனிலவு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் நைனிடால் என்ற இடத்திற்கு தேனிலவு சென்றனர். கணவன் மனைவி இருவர் மட்டுமே தேனிலவு செல்கிறோம் என்று நினைத்த சாதனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக விவேக்கின் ஒட்டுமொத்த குடும்பமும் தேனிலவுக்கு வந்தது.

அது ஒரு குடும்ப பயணமாக மாறியது. இதனால் தேனிலவில் அடிக்கடி கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேனிலவு முடிந்து வந்த பிறகும் இந்த பிரச்னைக்கு தீர்வுகாண முடியவில்லை. இந்த பிரச்னை முடியும் முன்பு அடுத்தகட்டமாக இரண்டாவதாக துபாயிக்கு தேனிலவு செய்ய விவேக் முடிவு செய்தார்.

ஆனால் இந்த பயணத்திலும் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களை அழைத்துச்செல்ல விவேக் முடிவு செய்தார். அதனை கேட்டு கொதித்துப்போன சாதனா தனது கணவரிடம் அவரது முடிவை எதிர்த்து கடுமையாக வாக்குவாதம் செய்தார். அதோடு இது அவர்களுக்குள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சாதனா இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தம்பதியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இருவரையும் குடும்ப கவுன்சிலிங் மையத்திற்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இரண்டு பேரும் மூன்று முறை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். சாதனா கவுனிலிங் நடத்தியவர்களிடம் பேசுகையில்,''கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும், பந்தத்தை உருவாக்குவதற்கும் தேனிலவு என்பது ஒரு சிறப்பான நேரமாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து சுற்றி இருந்ததால், தன் கணவருடன் தனியாக நேரத்தை செலவிட தனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை'' என்று தெரிவித்தார். இது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட காரணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். விவேக் தனது செயலை நியாயப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கவுன்சிலிங் செய்தவர்களிடம் கூறுகையில், `எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேனிலவின் போது குடும்பத்தை அழைத்து சென்றேன்.

பயணத்தில் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களைச் அழைத்துச்சென்றதில் தவறு இருப்பதாக கருதவில்லை' என்று தெரிவித்துள்ளார். மணமகள் இத்தேனிலவை திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பை தவறவிட்டதாக பார்க்கிறார். ஆனால் மணமகன் தனது நோக்கங்கள் நல்லதாகவும், குடும்பம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இருவரது நோக்கமும் சரியாக இருந்தாலும், இருவரும் கலந்து ஆலோசித்து இம்முடிவை எடுத்திருந்தால் பிரச்னை வந்திருக்காது.

ஆனால் இப்போது கவுன்சிலிங்கில் அவர்களை ஒன்று சேர்க்க முடியவில்லை. நான்காவதாக மீண்டும் ஒரு முறை அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் இருவரும் தங்களது முடிவில் இருந்து இறங்கி வரவில்லை. இதனால் இப்போது அப்பெண் கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User