”ராகுல்காந்தி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை”- நெகிழ்ந்த பட்டுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகி

Apr 19, 2026 - 13:02
 0
”ராகுல்காந்தி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை”- நெகிழ்ந்த பட்டுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். இதற்காக பல மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராகுல்காந்தியை வரவேற்கச் சென்றதுடன் அவருடன் உடன் இருந்தனர். காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் பட்டுக்கோட்டை மகேந்திரன். இவர் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர்.

துறையூரில் ராகுல்காந்தியுடன் மகேந்திரன்

சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலத்தில் நடைபெற்ற கிழக்கு மகாண கலை விழாவில் ராகுல் காந்தியுடன் கலந்துகொண்டார். ராகுல்மீது பெருமதிப்பு கொண்டவரான மகேந்திரனுக்கு பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனப் பரவலாக பேசப்பட்டது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் பட்டுக்கோட்டை தொகுதி கேட்கபட்டதாகவும் அப்போது தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. மீண்டும் தி.மு.கவே களமிறங்கியுள்ள நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ அண்ணாதுரை போட்டியிடுகிறார்.

மகேந்திரனுக்கு பட்டுக்கோட்டை தொகுதி கிடைக்காதது காங்கிரஸ் வட்டத்தில் பேசு பொருளானது. தலைமை எடுக்கும் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக மகேந்திரனும் அப்போது பேசியிருந்தார். இந்நிலையில் பிரசாரத்திற்கு துறையூர் வந்த ராகுல்காந்தியை மகேந்திரன் நேரில் சென்று சந்தித்தார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நேற்று தான் ராகுலை சந்தித்த நிலையில், அப்போது, `கவலைபடாதே மகேந்திரன் பொறுமையாக இரு' என்று உரிமையோடு ஆறுதல் சொல்லியுள்ளார். இதனை முகநூலில் நெகிழ்ச்சியுடன் மகேந்திரன் பதிவிட்டுள்ளார்

ராகுல்காந்தி | காங்கிரஸ்

இதுகுறித்து மகேந்திரனிடம் பேசினோம், "நான் மதிக்கும் தலைவர் என்னிடம் சொன்ன அந்த ஒரு வாத்தையில் நான் நெகிழ்ந்தேன். என்னைப் பொறுத்தவரை சீட்டுக்காக நான் கட்சியில் இல்லை, தலைவர் ராகுல்காந்திக்காக கட்சியில் இருக்கிறேன். அவரிடமிருந்து வெளிவந்த அந்த வார்த்தையில், எவ்வளவு பெரிய தலைவர், நானெல்லாம் அவருக்கு பொருட்டே இல்லை ஆனால் நமக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து அக்கறையுடன் பேசுகிறாரே என நெகிழ்ந்துவிட்டேன். அவரது பேச்சு ஆயிரம் மடங்கு வேகமாக என்னை ஓட வைப்பதற்கான ஊக்கத்திற்கு காரணமாகி வித்திட்டுள்ளது" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0