`காயத்தோடு நிற்கிறேன் என்னால் எதுவும் பேச முடியாது' - கும்பகோணத்தில் தழுதழுத்த எடப்பாடி பழனிசாமி!

Jun 01, 2026 - 19:31
0
`காயத்தோடு நிற்கிறேன் என்னால் எதுவும் பேச முடியாது' - கும்பகோணத்தில்  தழுதழுத்த எடப்பாடி பழனிசாமி!

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(32). இவர் திருப்பனந்தாள் கடைத்தெருவில் பூக்கடை நடத்தி வந்தார். அதிமுகவில் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக பதவி வகித்தார். இவருக்கு முனீஸ்வரி (25) என்ற மனைவியும், நித்ஸ்ரீ(1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுவில் குழப்பங்கள் நிலவி வருகிறது. அதிமுகவில் வென்ற எம்.எல்.ஏக்கள் சிலர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இணைந்து வந்தனர்.

அதிமுக நிர்வாகி மகேந்திரன்

இந்நிலையில், அதிமுக-வின் தீவிர விசுவாசியான மகேந்திரன் கட்சியில் நிலவும் இத்தகைய சூழலால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, `கட்சியில் நடப்பவற்றால் என்னை மாதிரி எளிய தொண்டர்கள் ரொம்பவே மன வேதனையுடன் இருக்கிறோம். என்னுடைய இறப்பிற்கு பிறகாவது கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்று சேர வேண்டும். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அ.தி.மு.க-வின் எளிய தொண்டனாக இருக்க ஆசைப்படுகிறேன்' என்று மகேந்திரன் பேசி வீடியோ எடுத்து அதை தனது முகநூல் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.

இதைதொடர்ந்து தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் மகேந்திரன். இது அதிமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினால் என் ஆத்மா சாந்தியடையும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மகேந்திரன் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, `நீங்க உயிரா நினைச்ச தலைவர் உங்களை பாக்க வந்திருக்கார் எந்திரிங்க' என்று முனீஸ்வரி கதறியதை பார்த்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் கலங்கி விட்டனர்.

எடப்பாடி பழனிசாமி

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ``மகேந்திரன் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. பல்லாண்டுகாலமாக சிறப்பான முறையிலே கட்சி பணியாற்றி, நிர்வாகிகளிடத்திலும், தொண்டர்களிடத்திலும், தலைமைக்கும் மிகுந்த விசுவாசமாக செயல்பட்டவர். மகேந்திரனின் பெண் குழந்தை, வளர்ந்து, பள்ளிபடிப்பை தொடங்கி, கல்வி கற்று முடிக்கும் வரை ஆகும் அனைத்துக் கல்விக் கட்டணத்தையும் அதிமுக ஏற்றுக் கொள்ளும்.

அதே போல் கட்சி சார்பில் ரூ.30 லட்சம், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நல நிதியாக குடும்பத்தினருக்கு வழங்கப்படும். அதிமுகவின் தொண்டர்கள் உயிர் விலைமதிக்க முடியாதது. இனி இப்படிப்பட்ட நிகழ்விலே யாரும் ஈடுபட வேண்டாம் என வணங்கி கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்தால் நாங்கள் எல்லோரும் மிகுந்த மன வேதனையில், மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். இன்றைக்கு அந்த குடும்பத்தினர் எப்படி கதறி அழுகிறது என்பதை ஒவ்வொரு தொண்டனும் உணர்கின்றான், ஒவ்வொரு நிர்வாகியும் உணர்கின்றனர். இந்த சூழ்நிலையில் வேறு கருத்தை என்னால் சொல்ல இயலாது. மன வேதனையோடு, கடுமையான காயத்தோடு நான் நிற்கிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User