தொடரும் நெல் மூட்டைகளில் முளைப்பு பிரச்னை: தடுப்பதற்கான 6 தீர்வுகள் இதோ!

Jun 26, 2026 - 16:31
0
தொடரும் நெல் மூட்டைகளில் முளைப்பு பிரச்னை: தடுப்பதற்கான 6 தீர்வுகள் இதோ!

நெல் கொள்முதல் நிலையங்களிலும், களங்களிலும் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் தற்போது மழையில் நனைந்ததால், அதில் முளைப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.

இது புதிது அல்ல. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இது தமிழ்நாட்டிற்கு மிகவும் பழகிய காட்சியே.

ஆனாலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் இன்னும் எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டின் பிரதான உணவே அரிசி. ஆனால், அரிசி உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு அடையவில்லை. அதனால், அரிசியை பிற மாநிலங்களில் இருந்தும் வாங்குகிறது தமிழ்நாடு.

இளங்கீரன்
இளங்கீரன்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் நெற்களில் முளைப்பு ஏற்படுவது போல அஜாக்கிரதையாக இருப்பது மிகப்பெரிய பிரச்னை அல்லவா?

இதனால், மழையின் போது நெல் முளைப்பு ஏற்படாமல் இருக்க, அரசு தரப்பில் இருந்து என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிற கேள்வியை காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே. வீ. இளங்கீரனிடம் முன்வைத்தோம்.

"1. கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்த உடனே மில்லுக்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும். மில்களில் நெல்லை சேமிப்பதற்கான வசதிகள் இருக்கும். அதனால், மழை பெய்தாலும், நெல் மூட்டைகள் பாதுகாப்பாக இருக்கும்.

2. அரசாங்கம் குறைந்த அளவிலான மில்களிலேயே அரவைக்கு நெற்களைக் கொடுக்கிறது. இதுவும் கொள்முதல் நிலையங்களிலும் நெல் தேங்கிவிடுவதற்கான முக்கிய காரணம். அதனால், அரவைக்கான மில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

3. சில மில்களில் 2 லட்சம் டன் அளவிற்கு அரவைத் திறன் இருக்கும். ஆனால், அந்த மில்களில் குறைந்த அளவிலேயே அரவை நெல் வழங்கப்படுகின்றன. இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

நெற்கதிர்கள்
நெற்கதிர்கள்

4. கொள்முதல் செய்த நெற்களை திறந்தவெளியில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்காத அல்லது பயன்படுத்தப்படாத அரசாங்க கட்டடங்கள் பல இருக்கின்றன. அங்கே கொள்முதல் செய்த நெற்களை வைக்கலாம்.

5. கொள்முதல் செய்யும் காலங்களில், கொள்முதல் நிலையங்களில் மழை பெய்தால் நனையாதப்படி நெற்களை சேமிக்கும் தற்காலிக ஏற்பாட்டை நிச்சயமாக அரசாங்கம் செய்ய வேண்டும். இது மிக மிக அடிப்படையான விஷயமாகும்.

6. இதையெல்லாம் விட முக்கியமான மற்றும் நிரந்தரமான தீர்வு, போர்கால அடிப்படையில், அரசாங்கம் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களைக் குறைத்து, பாதுகாப்பான கொள்முதல் நிலையங்களைக் கட்டி முடிக்க வேண்டும்.

மில் - அதிகாரிகள் பிரச்னை!

கடந்த குறுவை பயிர்கால நெல்லை கொள்முதல் செய்து திறந்த வெளியில் வைத்ததால் மழை மற்றும் வெயிலில் நெல்லின் தரம் மற்றும் நெல்லின் கலர் மாறிவிட்டது . அதனை மில்கள் அரவை செய்யும் போது, அரிசி சற்று நிறம் மாறி வந்திருக்கின்றன.

ஆனால், அதிகாரிகள் வெள்ளையாகத் தான் அரிசி வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். நெல் எப்படி இருக்கிறதோ, அப்படி தான் அரிசி கிடைக்கும்.

செறிவூட்டப்பட்ட அரிசி
செறிவூட்டப்பட்ட அரிசி

இதனால், மில்களுக்கும், அரசாங்கத்திற்கும் சிறிய பிரச்னை நடந்து வருகிறது. இதனாலும், கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கமடைந்துள்ளது.

இந்தப் பிரச்னையை சீக்கிரம் களைந்தால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் நிலையம்... கொள்முதல் நிலையத்தில் இருந்து மில்... மில்லில் இருந்து அரிசியாக நுகர்வோருக்கு செல்லும்.

செறிவுட்டபட்ட அரிசியை மத்திய அரசு அனுப்பாததால் அரவை 4 மாதத்திற்கு நிறுத்தப்பட்டது.

இப்படி அரசாங்க தரப்பிலும் சில தவறுகளும், பிரச்னைகளும் இருக்கின்றன. அதனால், நெற்கள் அரவைக்கு போகாமல், கொள்முதல் நிலையங்களிலேயே தங்கிவிடுகின்றன.

இப்படியான அரசு தரப்பிலான பிரச்னைகளையும் சீக்கிரம் களைய வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User