"ஸாரி அப்பா, அம்மா... செல்போனில் ஆதாரங்கள் உள்ளன" - போதை கணவரால் துயர முடிவை எடுத்த இளம்பெண்!

Jul 02, 2026 - 07:30
0
"ஸாரி அப்பா, அம்மா... செல்போனில் ஆதாரங்கள் உள்ளன" - போதை கணவரால் துயர முடிவை எடுத்த இளம்பெண்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ்(32). இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த நாகராஜன் - கலா தம்பதியரின் மகள் விக்னேஸ்வரி (27) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மூன்று நாள்களுக்கு முன் இவர்கள் இரண்டாவது திருமண நாளைக் கொண்டாடினர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் படுக்கையறை மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார் விக்னேஸ்வரி. அபிலாஷின் தந்தை சந்திரன் வீட்டிற்கு வந்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ​அவர் விக்னேஸ்வரியின் செல் போனுக்குத் தொடர்பு கொண்டபோது எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், பக்கத்து வீட்டாரின் உதவியுடன் படுக்கையறை ஜன்னல் கண்ணாடியை உடைத்துப் பார்த்தபோதுதான் விக்னேஸ்வரி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். விக்னேஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து சிலமணி நேரம் ஆனதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கைதுசெய்யப்பட அபிலாஷ்

விக்னேஸ்வரி தற்கொலை செய்துகொண்ட படுக்கையறையில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், "​அம்மா, எனது செல்போனை நன்றாகப் பரிசோதிக்க வேண்டும். எல்லா ஆதாரங்களும் அதில் உள்ளன. இனி இங்கு வாழ முடியாது. மது குடித்துவிட்டு கணவர் அபிலாஷ் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தார். அப்பா இதய நோயாளி என்பதால் எதையும் சொல்லவில்லை. ஒரு ஐ.டி நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்திருந்தேன். அது முடியும் வரை சகித்துக் கொண்டு பொறுத்திருக்க வேண்டியதாயிற்று. எனது தற்கொலைக்கு அபிலாஷும் அவரது மதுப்பழக்கமும்தான் காரணம். ஸாரி அப்பா, அம்மா..." என விக்னேஸ்வரி எழுதியிருந்தார்.

தற்கொலை செய்துகொண்ட விக்னேஸ்வரி

விக்னேஸ்வரியின் செல்போனை ஆய்வு செய்ததில், அவர் கணவர் உடல் ரீதியான சித்ரவதை செய்ததால் ஏற்பட்ட காயங்களின் சில புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் தனது அம்மாவுக்காக பதிவுசெய்து வைத்திருந்த வாய்ஸ் ரெக்கார்டிங் செல்போனில் இருந்துள்ளது.  கடிதம் மற்றும் செல்போன் ஆதாரங்கள் அடிப்படையில், விக்னேஸ்வரியை தற்கொலைக்குத் தூண்டியதாக அபிலாஷ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  தனியார் பேமெண்ட் ஆப் நிறுவனத்தில் வேலைசெய்யும் அபிலாஷ் நேற்று மாலை வீடுதிரும்பியதும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விக்னேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User