'புதிய தலைமுறை' சேனல் நிறுத்தம்: "கரூர் துயரத்தின்போது ஓட்டம் பிடித்தவர்தானே விஜய்" - அதிமுக கண்டனம்

May 29, 2026 - 14:01
0
'புதிய தலைமுறை' சேனல் நிறுத்தம்: "கரூர் துயரத்தின்போது ஓட்டம் பிடித்தவர்தானே விஜய்" - அதிமுக கண்டனம்

நேற்று அரசு கேபிள் டிவி சேவையில் 'புதிய தலைமுறை' சேனல் இருட்டடிப்பு செய்யப்பட்டது. நேற்று மதியம் 'புதிய தலைமுறை' சேனல் பலருக்குத் தெரியவில்லை என வந்த புகாரை அடுத்து அரசு கேபிள் டிவி தரப்பினரிடம், சேனல் தரப்பினர் பேச முயன்றிருக்கின்றனர்.

ஆனால், அவர்களிடம் இருந்து முறையான பதிலைப் பெற முடியவில்லை எனச் சேனல் தரப்பிலிருந்து தெரிவித்திருக்கிறார்கள்.

அரசு கேபிளில் 'புதிய தலைமுறை' சேனல் நிறுத்தம்
அரசு கேபிளில் 'புதிய தலைமுறை' சேனல் நிறுத்தம்

நேற்று இரவு முதல் அரசு கேபிள் சேவையில் மீண்டும் தெரியத் தொடங்கியிருப்பதாகவும் சேனல் தரப்பு விளக்கமளித்திருக்கிறார்கள்.

கட்சி தொடங்கப்பட்டது முதல் செய்தியாளர்களைச் சந்திக்காத முதல்வர் விஜய், டெல்லி சென்றிருந்தபோதும் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் புறக்கணித்தார்.

இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக புதிய தலைமுறை இருட்டடிப்பு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளப் பக்கங்களில் கண்டனம் வலுத்தது.

அரசு கேபிள் சேவையில் இருந்து 'புதிய தலைமுறை' சேனல் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அந்த அறிக்கையில், "அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க எனக் கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

விஜய்
விஜய்

ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைத்தளப் பதிவுகள் மீது வழக்குகள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்க காவல்துறை வாயிலாக X, Meta ஆகிய நிறுவனங்களுக்கு கடிதங்கள், அரசை விமர்சித்த நபர் கைது, தற்போது செய்தி சேனல் முடக்கம்… இது அப்பட்டமான திமுக மாடல்!

அப்படி எதற்காக புதிய தலைமுறை Blackout செய்யப்படுகிறது என்று பார்த்தால், டெல்லியில் இன்றைய முதல்வர் செய்தியாளர்களைச் சந்திக்காமல் தெறித்து ஓடிய செய்தியை வெளியிட்டது எனச் சொல்லப்படுகிறது.

டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்தபோது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறியபோது கூட அதைக் கண்டுகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர்தானே இவர்?

மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்து, தனக்கென ஒரு போலியான Demigod இமேஜ் உருவாக்கிக் கொள்ள இவர்கள் செய்யும் தந்திரம்தான் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது.

ஆனால், இது சினிமா அல்ல; பொதுவாழ்க்கை! மக்களின் கேள்விகளைக் கேட்கும் எதிர்க்கட்சிகள், ஊடகங்களை நேருக்கு நேர் சந்தித்துப் பதில் சொல்லத் திராணி இருக்க வேண்டும்.

அது இன்றைய முதல்வருக்கு இருக்கிறதா? இனியாவது வருமா? உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக்காட்டினால், அதைத் திருத்திக்கொள்ளப் பாருங்கள் அல்லது, மறுத்து உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களைக் கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள். புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User