பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! - கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி - பின்னணி என்ன?

Jun 24, 2026 - 16:00
0
பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! - கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி - பின்னணி என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் அணி - அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது கட்சி.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தந்தையும், மகனும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார் ராமதாஸ். அதேபோல வயதாகிவிட்டதால் ராமதாஸ் குழந்தையைப் போல பேசுகிறார் என வெளிப்படையாக விமர்சித்தார் அன்புமணி.

அதையடுத்து பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார் அன்புமணி. அதேபோல சசிகலாவுடன் கூட்டணி அமைத்து களத்தில் குதித்தார் ராமதாஸ். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது ராமதாஸ் அணி.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

அதேசமயம் நடிகர் விஜய்யின் தாக்கத்தையும் மீறி, பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி அணி, செஞ்சி, விக்கிரவாண்டி, தர்மபுரி, ஜெயங்கொண்டம் என நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது.

அதன்பிறகு இரண்டு அணிகளும் ஒன்றிணையும் என்று எதிர்பார்த்தனர் தொண்டர்கள். ஆனால் அப்படி எதுவும் நடைபெறாததால், பா.ம.க-வில் அன்புமணியின் கை ஓங்கியது. அதனால் ராமதாஸ் அணியில் இருப்பவர்கள், அன்புமணியின் பக்கம் தாவுவதற்கு ரூட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து `ஆக்டிவ்' தலைவராக வலம் வரும் அன்புமணி, முதல்வர் விஜய்யை சந்தித்து ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகப் பாராட்டினார்.  இந்த நிலையில்தான் இன்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்றிருக்கிறார்.

அப்போது அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமதாஸ் - சரஸ்வதி தம்பதிக்கு இன்று 61-வது திருமணநாள் விழா. அதற்காகத்தான் அன்புமணி குடும்பத்துடன் வந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும், உள்ளுக்குள் வேறு சில காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர் பா.ம.க நிர்வாகிகள்.

இதுகுறித்துப் பேசிய பா.ம.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், ``திருமண நாளுக்காக வந்திருப்பதாகக் கூறுவது எல்லாம் வெளிக்காரணம்தான். அன்புமணிக்கு அப்படி சென்டிமென்ட் எதுவும் கிடையாது. அப்படி என்றால் ஏன் கடந்த திருமண நாளுக்கு வரவில்லை?

உண்மை என்னவென்றால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பெரியவர் அணியை டம்மியாக்கிவிட்டது. பெரியவர் அணி எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்றாலும், அவரது ஆதரவாளர்கள் வாக்குகள் இழப்பு என்பதை உணர்ந்திருக்கிறார் அன்புமணி. அந்த வாக்குகளையும் முழுமையாக அறுவடை செய்திருந்தால், கூடுதலாக சில தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கலாம் என்பது அன்புமணியின் எண்ணம்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

அதனால் குடும்ப உறுப்பினர்களிடம் அதுகுறித்துப் பேசிய அன்புமணி, `உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு இந்தப் பிளவை சரி செய்துவிட வேண்டும். இல்லையென்றால் இழப்பு நம் அனைவருக்கும்தான்' என்று கூறியிருக்கிறார். பெரியவரின் காதுகளுக்கு இது சொல்லப்பட்டதும், அவரும் மௌனமாக இருந்தார்.

அதேசமயம் அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. `பெரியவர் பாசிட்டிவ் சிக்னல்தான் கொடுத்திருக்கிறார். அதனால் நீங்கள் வரலாம்' என்று அன்புமணிக்குத் தகவல் சென்றது. அதனடிப்படையில்தான் இன்று தைலாபுரம் வந்திருக்கிறார் அன்புமணி. அதனால் இதயம் இனித்து கண்கள் பனித்த தகவல் விரைவில் வெளியாக வாய்ப்பிருக்கிறது" என்றார்.

உள்ளே சென்ற அன்புமணியை கட்டிப்பிடித்து கண் கலங்கியிருக்கிறார் ராமதாஸ். அதையடுத்து அவரைத் தேற்றிய அன்புமணி, மனைவி மகள்களுடன் காலில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார். அதனால் இரண்டு அணிகளும் ஒன்றிணையும் சூழலை எட்டியிருப்பதாகக் கூறுகின்றன பா.ம.க வட்டாரங்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User