உதயநிதி கைது: ``நாங்க என்ன தீவிரவாதிகளா... இப்படி அடிச்சிருக்கீங்க?" - மேயர் பிரியா
எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் சாலை மறியல், அரசுக்கு எதிரான போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைக் கலைக்கும் வகையில் சில இடங்களில் தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் சிலருக்கு காயமேற்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், மேயர் பிரியா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு சம்பவமாகும். கழக உடன்பிறப்புகள் தங்களது தலைவரைக் காண்பதற்காக நேரில் வந்திருந்தனர். அவ்வாறு சந்திக்க வந்த கழகத் தொண்டர்கள் மீது காவல்துறை கடுமையான தடியடி நடத்தியிருக்கிறது இந்தக் காவல்துறை.

இந்தத் தாக்குதலில் இருவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு மூக்கில் எலும்பு முறிவும், மற்றொருவருக்கு உடல் முழுவதும் ரத்த உறைவும் ஏற்பட்டுள்ளது. கட்சிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தும் அளவிற்கு அவர்கள் என்ன தீவிரவாததச் செயலிலா ஈடுபட்டார்கள். அரை மணி நேரத்திற்குள் காவல்துறையினர் பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் எதிராக இப்படி ஒரு கொடூரமான நடவடிக்கையை எடுத்திருப்பது முற்றிலும் அராஜக அரசியலாகும்.
'ஜனநாயகம்' என்று பேசுகிறவர்கள், இன்றைக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள். திரையரங்கிற்குச் சென்று 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்து அழுகிறார்கள். ஆனால், நிஜத்தில் ஒரு மனிதனுக்கு ரத்தம் வரும் அளவிற்குத் தாக்குவதுதான் ஜனநாயகமா? காவல்துறை உங்கள் அதிகாரத்தின் கீழ் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா?
இவற்றுக்கெல்லாம் தற்போதைய அரசாங்கம் கண்டிப்பாகப் பதிலளித்தே ஆக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சக்கூடிய இயக்கம் அல்ல. சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் வழியே இதற்கு எதிராகத் தேவையான அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்." என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)