'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

Jun 13, 2026 - 20:01
0
'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர்.

கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் போன்றோர் பனையூரில் தவெகவில் இணைந்திருந்தனர்.

Vijay
Vijay

அதிமுக-வினரை தவெகவில் இணைக்கும் 'ஆப்பரேஷன் இரட்டை இலை'யை இன்னும் வீரியமாக அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல தவெக-வின் வியூக வகுப்புக்குழு முடிவெடுத்திருப்பதாகக் கிசுகிசுக்கின்றனர் கட்சியின் முக்கியஸ்தர்கள்.

அதிமுகவினரின் ஒவ்வொரு இணைப்பு விழாவின் போதும், 'அதிமுகவை எடப்பாடி அழித்துவிட்டார். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர். தவெகதான் இனி அதிமுக' என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிவருகிறார்.

இன்று கூட, 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவும் எங்களின் கனவும் ஒன்றுதான்' எனப் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் தவெகவை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

Vijay
Vijay

இந்நிலையில், தவெக செய்து வரும் 'ஆப்பரேஷன் இரட்டை இலை'யை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பனையூரின் வியூக தரப்பு முடிவெடுத்திருக்கிறதாம்.

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய கட்சி வட்டாரத்தினர், ''அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை மட்டுமே இதுவரை பனையூரில் வைத்து கட்சியில் இணைத்து வந்தோம். இதற்கு அடுத்தக் கட்டமாக இனி மாவட்டம் மாவட்டமாக அதிமுகவிலிருந்து வரும் லோக்கல் நிர்வாகிகளை இணைக்க இணைப்பு விழாக்களைத் திட்டமிட்டு வருகிறோம்.

முதற்கட்டமாக மதுராந்தகத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்த மரகதம் குமரவேல் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தவெக-வில் இணைக்கவிருக்கிறார். அந்த இணைப்பு விழாவை மிக பிரமாண்டமாக நாளையே மதுராந்தகத்தில் நடத்தவிருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் தவெகவில் இணைந்த அதிமுகவின் முக்கியஸ்தர்கள் பலரும் அவர்களின் மாவட்டங்களில் இணைப்பு விழாக்களை நடத்தவிருக்கின்றனர்.

அதிமுகவின் பலமே கடைசி கிராமம் வரைக்கும் இருக்கும் அதன் கட்டமைப்புதான். அந்தக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் விதமாக ஒன்றியம், நகரம், கிளை வரைக்கும் நிர்வாகிகளை கட்சியில் இணைக்கும் பணியை எங்களின் வியூக வகுப்புக்குழு இப்போது கையில் எடுத்திருக்கிறது.

இதற்காக எங்களின் நிர்வாகிகள் பெரியளவில் சிரமப்பட வேண்டிய தேவையே இல்லை. ஏற்கனவே அதிமுகவின் நிர்வாகிகள் பலரும் தலைமைச் செயலகத்திலும் பனையூரிலும் வந்து எங்கள் கட்சியில் இணைய காத்துக் கிடக்கின்றனர். அவர்களை மாவட்ட ரீதியாக தொகுதிரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தி இணைக்கும் போது அதிமுகவினர் தவெகவை நோக்கி நகர்ந்துவிட்டனர் எனும் பிம்பத்தை இன்னும் அதிகப்படுத்தும்.

அது எற்கனவே பலவீனமாக இருக்கும் அதிமுகவை இன்னும் பலவீனமாக்கும். அதன்வழி போட்டி தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் எங்கள் தலைவர் உருவாக்கிய கருத்தாக்கம் நீண்ட காலத்துக்கானதாக நிலைத்திருக்கும்'' என்கின்றனர்.

மதுராந்தகத்தில் நாளை நடக்கும் இணைப்பு விழா நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் மற்றும் சென்னையைச் சுற்றியிருக்கும் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User