பெயர் மாற்றம்: ஸ்டாலின் அறிவித்தார்; விஜய் நிறைவேற்றுவாரா? காத்திருப்பில் வேலூர் காவலர் பயிற்சிபள்ளி

Jun 03, 2026 - 19:02
0
பெயர் மாற்றம்: ஸ்டாலின் அறிவித்தார்; விஜய் நிறைவேற்றுவாரா? காத்திருப்பில் வேலூர் காவலர் பயிற்சிபள்ளி

புதிதாக தேர்தெடுக்கப்படும் காவலர்களுக்கு சட்ட அறிவு பயிற்சிகள் முதல் அவர்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் வரை வழங்கும் பணியினை காவலர் பயிற்சி பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிகளில் பழைமையான பயிற்சி பள்ளி, வேலூரில் அமைந்துள்ளது. வேலூர் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் இந்த பயிற்சி பள்ளி சுமார் 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். 1896 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் காவலர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கும் பள்ளியாக இது செயல்பட தொடங்கியது. பின்னாளில் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கீழ் நிரந்தர காவலர் பயிற்சி பள்ளியாகச் செயல்பட தொடங்கியது. 130 ஆண்டுகளில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்குப் பயிற்சி அளித்த பள்ளி என்ற பெருமையும் இந்தக் காவலர் பயிற்சி பள்ளிக்கு உண்டு. 

வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்!

இப்படி வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்தக் காவலர் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என 19.09.2025 அன்று அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், “இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் போராளி - ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன். இந்த மகிழ்ச்சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் எனப் பெருமிதத்துடன் அறிவிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக சிப்பாய் புரட்சி நடந்த பகுதி வேலூர் கோட்டை என்பதால், வேலூர் மக்களிடமும் இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றது. 

இன்னும் பெயர் பலகைகூட வைக்கவில்லை

கடந்த ஆட்சியில் முதல்வர் அறிவித்து 8 மாதங்கள் ஆகியும் தற்போது வரை வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டிய பெயர் பலகை வைக்காமல் இருக்கின்றனர். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க ஆட்சி அமைந்துள்ளது. த.வெ.க-வின் கொள்கை தலைவர்களில் ஒருவராக வீரமங்கை வேலுநாச்சியார் உள்ளார். இந்நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, தங்களுடைய கொள்கை தலைவரான வேலு நாச்சியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் பெயர் பொறிக்க நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. 

அதிகாரிகள் பதில் 

இது குறித்து வேலூர் காவலர் பயிற்சி பள்ளியின் டி.எஸ்.பி நிலவழகனிடம் கேட்டபோது, “இதற்கான அரசாணை அண்மையில்தான் எங்களுக்கு கிடைத்தது. வேலு நாச்சியார் பெயர் சூட்டிய பலகை வடிவமைக்கப்பட்டு வருகிறது. வடிவமைத்த பெயர் பலகையை உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். அனுமதி பெற்ற உடன், இந்த வார இறுதிக்குள் வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டிய பெயர் பலகை பொருத்தப்படும்.” என்றார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User