தீரன் சின்னமலை நினைவு நாள்: சாலைகளில் எல்லை மீறிய இளைஞர்கள், திணறிய காவல்துறை!
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் கொங்கு நாட்டு பாளையக்காரர்களில் ஒருவருமான தீரன் சின்னமலை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்த்து காவிரி கரை போர், ஓடாநிலை போர், அரச்சலூர் போர் ஆகிய போர்களை நடத்தி அதிர வைத்தவர். பிரிட்டிஷாரின் சூழ்ச்சியால் தூக்கிலிடப்பட்டார். அவரின் வீரத்தைப் போற்றும் விதமாக நினைவு நாளை தமிழ்நாடு முழுவதும் அனுசரித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் நேற்று நடைபெற்ற நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்திய அளவில் போற்றப்படும் விடுதலைப் போராட்ட வீரரின் நினைவு நாளை அனுசரகக்கிறோம் என்கிற பெயரில் சில சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலைகளிலும் பொது இடங்களிலும் விதிமுறைகளை மீறி அத்துமீறலில் ஈடுபடுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஈரோடு, நாமக்கல், சேலம் பகுதிகளில் வாகனங்களின் நபர் பிளேட்களை அகற்றியும் மறைத்தும் பயணிக்கும் இளைஞர்கள், விதிமீறிப் பயணிப்பது, அதிக ஒலியில் ஹாரன் எழுப்புவது, மக்களைப் பார்த்து கூச்சலிடுவது, வாகனங்கள் மீது ஏறி நிற்பது, காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற இந்த அத்துமீறலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பெயருக்கு ஒன்றிரண்டு வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கொங்கு நாட்டின் மாவீரர் என்று போற்றப்படும் தீரன் சின்னமலை அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலரால் நடைபெற்று வரும் இத்தகைய அத்துமீறல்களை சம்மந்தப்பட்ட சாதி அமைப்புகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)