மிமிக்ரி கலைஞர்... நகைச்சுவை நடிகர் டு காங்., ஆதரவாளர் - நடிகர் சலிம்குமார் உடல்நலக் குறைவால் மரணம்!

Jun 07, 2026 - 13:01
0
மிமிக்ரி கலைஞர்... நகைச்சுவை நடிகர் டு காங்., ஆதரவாளர் - நடிகர் சலிம்குமார் உடல்நலக் குறைவால் மரணம்!

மலையாளத் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திரக் கலைஞராக மக்கள் மனங்களை வென்ற தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் சலிம்குமார் (57) காலமானார். சிறுநீரகக் கோளாறு காரணமாக எர்ணாகுளம் அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு 10.45 மணியளவில் காலமானார். நேற்று அதிகாலை டயாலிசிஸ் செய்வதற்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, டயாலிசிஸ் நடைமுறையின் போது திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். ஏற்கெனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இவருக்கு, தற்போது நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.

​மறைந்த நடிகர் சலிம்குமாரின் உடல் பொதுமக்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 9 மணி முதல் பறவூர் டவுன் ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று மாலை பறவூரில் உள்ள அவரது வீட்டு வளப்பத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நடிகர் சலிம்குமார் உடல்

1969-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம், பறவூர் சிற்றாற்றுகரையில் கங்காதரன் மற்றும் கௌசல்யா தம்பதியினரின் இளைய மகனாகப் பிறந்தார் சலிம்குமார். கொச்சின் கலாபவன், கொச்சின் சாகர் போன்ற புகழ்பெற்ற மிமிக்ரி குழுக்கள் மூலம் மேடை கலைஞராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும் கலைத்துறையில் நுழைந்தார். 1996-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி சுனிதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு சந்து மற்றும் ஆரோமல் என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு அடுத்த நாளான செப்டம்பர் 15 அன்றே, தனது முதல் திரைப்படமான 'இஷ்டமானு நூறுவட்டம்' படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார்.

​ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கிய சலிம்குமார், மீசை மாதவன், தென்காசிப்பட்டணம், சதிகாத்த சந்து, சி.ஐ.டி மூசா, திலக்கம், கல்யாணராமன் போன்ற 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை முகமாக மாறினார்.

2005-ம் ஆண்டு 'அச்சனுறங்காத வீடு' திரைப்படத்தின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான கேரள மாநில அரசின் விருதைப் பெற்றார். தொடர்ந்து 2010-ம் ஆண்டு வெளியான 'ஆதாமின்றெ மகன் அபூ' திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், மாநில அரசின் விருதையும் வென்று சாதனை படைத்தார். 2012-ல் 'அயாளும் ஞானும் தம்மில் திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதையும் வென்றார்.

நடிகர் சலிம்குமார்

நடிப்போடு நின்றுவிடாமல், 'கறுத்த ஜூதன்', 'தெய்வமே கைதொழாம், கே. குமாராகணம்' ஆகிய திரைப்படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். இதில் 2017-ல் வெளியான 'கறுத்த ஜூதன்' திரைப்படம் சிறந்த கதைக்கான மாநில அரசின் விருதைப் பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக கடுமையான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக அவர் சினிமா உலகை விட்டு சற்று விலகியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளரான சலிம்குமார், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பல்வேறு தொகுதிகளில் தீவிரப் பிரசாரங்களிலும் ஈடுபட்டார். நகைச்சுவை நடிகராக தொடங்கி தேசிய விருது வரை வென்று, மலையாள சினிமாவின் ஆன்மாவாக வாழ்ந்த ஒரு மாபெரும் கலைஞர் சலிம்குமாரின் மறைவு இந்தியத் திரை உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User