ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

Jun 13, 2026 - 18:01
0
ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன.

தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''இந்த வார இறுதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படலாம். பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டோம்'' என்று தெரிவித்திருந்தார்.

நேற்று, ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில்...

ஷெபாஸ் ஷெரீப் - அப்பாஸ் அராக்சி
ஷெபாஸ் ஷெரீப் - அப்பாஸ் அராக்சி

"இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Islamabad MoU) இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

இது முழுமையாக இறுதி செய்யப்படும் வரை, இதன் உள்ளடக்கங்கள் குறித்து ஊடகங்கள் எந்தவொரு ஊகங்களையும், வதந்திகளையும் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களது பொறுப்பான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையின்படி, இந்த ஒப்பந்தத்தின் அனைத்து விவரங்களும் உரிய நேரத்தில் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவை தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் ட்ரம்பும் ஷேர் செய்திருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் நல்ல செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்...

"நாம் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக நெருக்கமாக அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இது முழுமையாக இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ஒப்பந்தம் முடிந்த உடனேயே மின்னணு முறையில் அதில் கையெழுத்திட பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

ஷெபாஸ் ஷெரீப் பதிவு
ஷெபாஸ் ஷெரீப் பதிவு

இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வந்த அமெரிக்காவிற்கும், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தங்களது ஆதரவை வழங்கிய இந்தப் பிராந்தியத்திலுள்ள எங்களது சகோதர நாடுகளுக்கும் எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், ஒரு நிலையான அமைதிக்கான வலுவான அடித்தளமாக அமையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்".

ஆக, விரைவில் போர் நிறுத்தம் என்பது பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User