மேலூர் இளைஞர் மரணம்: நிபுணர் குழு மூலம் உடற்கூறாய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

Jul 09, 2026 - 15:02
0
மேலூர் இளைஞர் மரணம்: நிபுணர் குழு மூலம் உடற்கூறாய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த கவிதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் சீமைராஜா. கடந்த ஜூலை 4-ல் மேலூர் காவல் ஆய்வாளர், என் மகன் சீமைராஜாவைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். எதற்காகத் தேடுகிறீர்கள் எனக் கேட்ட போது மேலூர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டதற்காக மகனைத் தேடுவதாகக் கூறினார்.

ஜூலை 6-ம் தேதி காலை 9 மணி அளவில் மேலூர் காவல் ஆய்வாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சாலை விபத்தில் சீமைராஜா இறந்து விட்டதாகவும், அவர் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறினார்.

நாங்கள் சென்று பார்த்தபோது உடலில் எந்தக் காயங்களும் இல்லை. சீமைராஜவுடன் சென்ற மற்றொரு நபரான சூர்யாவைச் சந்திக்க போலீஸார் அனுமதிக்க மறுக்கிறார்கள். என் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது மகனின் உடலை மூத்த தடயவியல் நிபுணர் குழுவை வைத்து உடற்கூறாய்வு செய்யவும், உடற்கூறாய்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்யவும், மேலூர் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

சீமைராஜா
சீமைராஜா

இம்மனுவை நீதிபதி எஸ்.விக்டோரியா கௌரி விசாரித்தார். அரசு தரப்பில், 'சாலை விபத்தில் உயிரிழந்தவருடன் சென்ற நபர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்' எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் அவரது வழக்கறிஞருடன் சென்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரைப் பார்த்து பேசவும், பின்னர் தேவை எனில் இவ்வழக்கைத தொடர்ந்து நடத்தலாம்' எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User