மேகதாது அணை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு; மனுவில் சொல்லப்பட்டது என்ன?

May 29, 2026 - 09:01
0
மேகதாது அணை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு; மனுவில் சொல்லப்பட்டது என்ன?

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அணை கட்டப்பட்டால், காவிரியின் கீழ்மடை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நீரின் அளவு பெருமளவில் குறையும் என்றும், இதனால் காவிரி நீரை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது.

இதன் காரணமாக, மேகதாது அணை திட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது.

முதல்வர் விஜய் -  கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
முதல்வர் விஜய் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

இதற்கிடையே, காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டவும், டெல்டா உள்ளிட்ட தமிழ்நாடு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் விஜய், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 25-ம் தேதி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

உச்ச நீதிமன்ற மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புகளின் விவரங்களை முழுமையாகக் கருத்தில் கொண்டு, விரிவான சட்ட ஆலோசனைக்குப் பின்னர், உடனடியாக எடுக்கப்பட வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

முதலமைச்சரின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மூத்த வழக்கறிஞர் ஜி.உமாபதி, காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் களத்தில் இறங்கினர்.

அவர்கள் தமிழ்நாட்டிற்குச் சாதகமாக உள்ள அனைத்து சட்டப்பூர்வ வாய்ப்புகளையும் தீவிரமாக ஆராய்ந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், நேற்று முன்தினம் டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், மேகதாது விவகாரத்தில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த வழக்கறிஞர் ஜி.உமாபதியுடன் தமிழ்நாடு இல்லத்தில் வைத்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் விஜய்

இந்த ஆலோசனையின்போது, மேகதாது அணை திட்டத்திற்கு முழுமையான தடை கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்ய முதலமைச்சர் இறுதி ஒப்புதல் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் நியமனத்தில் முனைவர் பட்டம் பெற்ற மூத்த வழக்கறிஞர் ராம்சங்கரிடம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யும் முக்கியப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், "கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணை திட்டத்தினால், அந்தப் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் அபாயம் உள்ளது. இதனால் காடுகளின் பரப்பளவு குறைந்து, அப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட அரிய வகை விலங்கினங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டிய சட்டப்பூர்வ பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது என்று அறிவித்து, அந்தத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மேலும், மேகதாது அணை கட்டுவதற்கான உரிய சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடகம் பெறவில்லை. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எவ்வித ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது எனக் கர்நாடக அரசுக்கும், காவிரி நீர் வாரி நிகம் நிறுவனத்திற்கும் தீர்ப்பாயம் கடுமையான தடை விதிக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, சுற்றுச்சூழல் விதிகளை முற்றிலும் மீறிச் செயல்படுத்தப்படும் இந்த மேகதாது அணை திட்டத்திற்கு, எக்காரணம் கொண்டும் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும் தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User