"காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மெகா ஊழல்" - ஜோதிமணி எம்.பி., பகிரங்கக் குற்றச்சாட்டு
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள சூழலில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவின் மீது அவர் அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.
வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. சர்வே என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை, வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள், வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கிவிட்டனர்.
இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதனடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விசாரணை நடத்தாமல், தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளை மட்டும் விசாரிக்க கமிட்டி அமைப்பது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே.
தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டது தமிழ்நாடு பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கமிட்டி. அந்தக் கமிட்டி மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டுமே விசாரிக்க முடியும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொறுப்பாளர்கள் விசாரிக்க முடியாது.
காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பல்வேறு மாநிலத் தேர்தல்களில் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சில நேரங்களில் இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஆனால் விசாரணை செய்வதற்குப் பதிலாக தவறு செய்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.
தமிழ்நாடு வேட்பாளர் தேர்வை மிக அருகில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வெளிப்படையாகத் தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
இந்த நாட்டை பா.ஜ.க நரேந்திர மோடியிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் எவ்வித சமரசமும் இல்லாமல் போராடி வருகிறார்.
ஆனால் கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைக் குலைத்து வருகின்றன. நாம் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக களத்தில் நின்று போராடி வெற்றிபெற வேண்டுமானால் கட்சிக்குள் தொண்டர்கள் மாவட்ட, வட்டார தலைவர்களின் குரலுக்கு மதிப்பு இருக்க வேண்டும். நேர்மையோடும், வெளிப்படைத்தன்மையோடும் கட்சி செயல்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழ்நாட்டில் இருந்து துவங்கட்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கட்சிக்குள் வெடிக்கும் மோதல்: அடுத்து என்ன?
தமிழக காங்கிரஸ் கமிட்டி அமைத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு, தேர்தலில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில், மூலக்காரணமான வேட்பாளர் தேர்விலேயே ஊழல் நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நேரடியாகக் குற்றம் சாட்டியிருப்பது டெல்லி மேலிடம் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் ஜோதிமணியின் இந்தப் பதிவு, தமிழக காங்கிரஸ் தலைமைகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளித்து கட்சித் தலைமை உடனடியாகத் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)