மயிலாடுதுறை: சமுதாயக் கூடத்தில் இயங்கும் அரசுக் கல்லூரி; நிலையான கட்டடத்திற்கு ஏங்கும் மாணவர்கள்!

Jun 01, 2026 - 15:31
0
மயிலாடுதுறை: சமுதாயக் கூடத்தில் இயங்கும் அரசுக் கல்லூரி; நிலையான கட்டடத்திற்கு ஏங்கும் மாணவர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, 2020-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இக்கல்லூரியானது தேரழுந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப்பள்ளியின் உயிரியல் ஆய்வகத்தில் இயங்கிவந்தது. அதன் பின்னர் அடுத்த கல்வியாண்டிலேயே மாணவர்களின் சேர்க்கை அதிகரித்த நிலையில் குத்தாலம் வட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடமானது கல்லூரியாக மாற்றப்பட்டது.

தற்போது இக்கல்லூரியில் கோமல், மொழையூர், திருவாலாங்காடு, சோழபுரம், மேக்கிரிமங்கலம் போன்ற குத்தாலம் ஒன்றியத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஏழாவது கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் இக்கல்லூரிக்கு நிலையான கட்டட வசதி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முறையான கட்டட வசதியின்மையால் மாணவர்களுக்கு கற்றலில் ஒரு சில இடர்பாடுகள் ஏற்படுவதுடன் இக்கல்லூரியின் சேர்க்கை விகிதமும் ஆண்டுக்காண்டு குறைந்துக் கொண்டே செல்கிறது.

இது குறித்து கல்லூரி மாணவர்களிடம் பேசியபோது,

“எங்க கல்லூரியைச் சுத்தி வயல்தான். வயலுக்கு நடுவுல தான் எங்க கல்லூரி இருக்கு. இதனால பாம்பு, பூச்சிலாம் எப்போவாச்சம் வந்துட்டு போகும். நீட்டா உள்ள கட்டடத்தை ஆஸ்பெஸ்ட்டாஸ் ஷீட் வச்சிதான் ஒவ்வொரு க்ளாஸ்ஸா தடுத்து இருப்பாங்க. அப்படி தடுத்து இருக்கிறதுனால மேல கொஞ்சம் கேப் இருக்கும். அந்த கேப் வழியா ஒரு க்ளாஸ்ல போடுற சத்தம் இன்னொரு க்ளாஸ்க்கு நல்லாவே கேட்கும். எங்க க்ளாஸ்ல பாடம் நடத்துறதும் கேட்கும். எங்களுக்கு பக்கத்து க்ளாஸ்ல பாடம் நடத்துறதும் நல்லாவே கேட்கும். இதனால, எங்களால நடத்துற பாடத்தை சரியான புரிஞ்சிக்க முடியாது. எங்க கல்லூரிக்குள்ள நடந்துவர்ற பாதை, செம்மண் பாதைதான். அதுல வெயில் காலத்துல ஈசியா நடந்து வந்துடலாம். ஆனால் மழைக்காலத்துல ரொம்ப கஷ்டம். மழைக்காலத்துல அது ரோடு மாதிரியே இருக்காது. சேறும் சகதியுமா இருக்கும். இந்த சகதியுலையும் சேத்துலையும் நடந்து வர ரொம்ப கஷ்டமாக இருக்கும். அந்த நேரத்துல வண்டியில வந்த நெறைய பேரு விழுந்திருக்காங்க.

நாங்க எல்லாம் உக்கார்ந்து படிக்க ஒரு லைப்ரரிகூட கிடையாது. எங்க காலேஜ்ல உள்ள பசங்க மாவட்ட அளவில், பல்கலைக்கழக அளவிலான ஸ்போர்ட்ஸ்ல நிறைய பரிசுகள் வாங்கி இருக்காங்க. ஆனா, அந்த பசங்க எல்லாருக்கும் பிராக்டிஸ் பண்றதுக்கு ஒரு கிரௌண்ட்கூட கிடையாது.

எங்க காலேஜ் வெளியில இருந்து பாக்குறத்துக்கு காலேஜ் மாதிரியே இருக்காது. முகமே முகவரின்னு சொல்வாங்க. ஆனா, எங்க காலேஜ் முகமே பொலிவில்லாமதான் இருக்கு. அரசுதான் சீக்கிரம் எதாவது ஏற்பாடு பண்ணி எங்கக் கல்லூரியைக் கட்டிக்கொடுக்கணும். அடுத்தடுத்து வர மாணவர்களுக்காவது நல்ல தரமான அனைத்து வசதிகளுடன் கூடிய கல்லூரியாக அமைய வழிவகை செய்ய வேண்டும்" என்றனர்.

தொடர்ந்து கல்லூரி முதல்வர் சௌந்தரானிடம் இது பற்றி பேசியபோது , “2020-21-ம் தொடங்கப்பட்ட 7 கல்லூரிகளில் 6 கல்லூரிகள் நிரந்தரமான புதிய கட்டடத்திற்குச் சென்றுவிட்டன. குத்தாலம் கல்லூரி மட்டும்தான் நிலையான இடமின்றி சமுதாயக் கூடத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. 5 துறைகளுக்கும் 15 வகுப்பறைகள் இருக்க வேண்டிய நிலையில், 8 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் காலையில் 3 துறைகள், மதியம் 2 துறைகள் என சுழற்சி முறையிலேயே கல்லூரி இயங்கி உள்ளது.

இதனால் மாணவர்களின் சேர்க்கை விகிதமும் ஆண்டுக்கு இரண்டு மூன்று சதவிகிதம் குறைவாகவே உள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பு ஆதீனத்திடம் இருந்து கல்லூரி கட்டுவதற்கு ஓர் இடமானது தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு ஆதீனமும் சம்மதம் தெரிவித்தது‌. ஆனால், தற்போது ஆதீனம் அந்த இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தினை தருவதாகக் கூறி ஆட்சியர் மறுத்த நிலையில், ஆதீனம் சார்பில் 2025 ஜனவரியில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நல்ல முறையில் முடியும். விரைவில் கல்லூரி கட்டலாம் என நம்பிக்கையூட்டும் விதமாக ஆட்சியர் கூறியிருக்கிறார்" என்றார்.

குத்தாலம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேசுகையில், ``பணிக்கு சேர்ந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இது பற்றி உதவி செயற்பொறியாளரிடம் பேசுங்கள்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

நம்மிடையே பேசிய உதவி செயற்பொறியாளர், ``கல்லூரி கட்டுவதற்கு தேர்வு செய்த இடத்திற்கு பதிலாக மாற்று இடத்தினை தருவதாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று போட்டுப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் கூறினார்.

மாற்றைத்தை நோக்கிய புதிய அரசு, விரைந்து துறைச் சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு கல்லூரிக்கான நிலையான கட்டடத்தைக் கட்டித் தர வேண்டும் என்பதே அக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User