மத்தியப் பிரதேசம்: 90 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; முகமூடி அணிந்து வந்த கும்பலுக்கு வலை

Mar 9, 2026 - 09:31
 0
மத்தியப் பிரதேசம்: 90 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; முகமூடி அணிந்து வந்த கும்பலுக்கு வலை

மத்தியப் பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் முகமூடி அணிந்த நான்கு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தனது விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் மூதாட்டி தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் உள்ளே புகுந்து இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து காலையில் கிராமத்தில் வசித்து வந்த தனது மகளிடம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தெரிவித்தார். உடனே அவரை அவரது மகள் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் கேட்டுக்கொண்டபடி இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்போது மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் காயமடைந்திருந்தாலும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கண்ட்வா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ராய் அறிவித்துள்ளார்.

மற்றொரு சம்பவத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கல்லூரி வளாகத்தில் 20 வயது பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அப்பெண்ணை அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் கடத்திச்சென்று இக்குற்றத்தைச் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 3 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0