`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

Jun 12, 2026 - 13:32
0
`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை காமெடி ஷோவில் பகிர்ந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சாஜல் சமீபத்தில் காமெடி ஷோ ஒன்றில் பங்கேற்று இருந்தார். அதில் தான் கையாளும் பிரேத பரிசோதனை குறித்து பேசி காமெடி ஷோவை நடத்திய பிரனித் மோரேயுடன் இணைந்து சிரித்தார். அவர் அந்த ஷோவில் பிரணித் மோர் நடத்திய கலந்துரையாடலின்போது, ​​`பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் தீவிரமான மனநிலையிலேயே இருக்கிறார்களா அல்லது பணிச்சூழலில் அவ்வப்போது நகைச்சுவையும் இடம்பெறுகிறதா?' என்று கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சாஜல் பவார், மருத்துவக் கல்விக்காகப் பயன்படுத்தப்படும் சடலங்கள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, ​​`ஆண் சடலங்களின் பிறப்புறுப்புகளின் அளவை தானும் தனது சக ஊழியர்கள் சிலரும் ஒப்பிட்டுப் பார்ப்பதாக' அவர் கூறி சிரித்தார்.

மருத்துவக் கல்வி மற்றும் அறிவியல் பயிற்சிக்காகத் தங்கள் உடல்களை நன்கொடையாக அளித்த தனிநபர்களை அவமதிக்கும் வகையில் அந்த கருத்துகள் இருந்ததாகக் கூறி, பார்வையாளர்கள் விமர்சித்த நிலையில், அந்த உரையாடல் இடம்பெற்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

மன்னிப்பு கேட்ட டாக்டர்

அதனை பார்த்த நெட்டிசன்கள் டாக்டர் சாஜலை கடுமையாக விமர்சித்தனர். எதிர்கால சுகாதாரத்துறை நிபுணர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கு தானமாகப் பெறப்படும் உடல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி, உடல் தானம் செய்தவர்கள் குறித்து ஏளனம் செய்வதோ அல்லது அலட்சியமான கருத்துகளைத் தெரிவிப்பதோ, மருத்துவப் பயிற்சியுடன் பாரம்பரியமாக இணைந்துள்ள கண்ணியத்தைக் குலைப்பதாக அமையும் என்று பல பயனர்கள் வாதிட்டனர்.

எதிர்ப்புகள் வலுத்த நிலையில் பவார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். அந்த மன்னிப்புக் குறிப்பில், தனது கருத்துகளால் எழுந்த எதிர்வினைகளை அவர் ஒப்புக்கொண்டதுடன், தனது வார்த்தைகளுக்குப் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார்.

சொல்லப்பட்ட விஷயங்களை நியாயப்படுத்தவோ அல்லது அதற்கான காரணங்களை விளக்கவோ நான் இங்கு வரவில்லை. அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது, ​​நான் சொல்ல வந்ததிலிருந்து மாறுபட்ட விதத்தில் என் வார்த்தைகள் புரிந்துகொள்ளப்பட்டிருக்கக்கூடும் என்பதை என்னால் உணர முடிகிறது!" என்று அவர் எழுதினார். சாஜல் இதே ஷோவில் தெரிவித்த தனது கல்லூரி தொடர்பான கருத்து பற்றிய ஒரு காணொலியும் வைரலாகி இருக்கிறது.

அதுவும் சாஜலுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக ஊடகப் பயனர் ஒருவரால் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளியில், டாக்டரிடம் அவரது கல்லூரியைப் பற்றிக் விவரிக்குமாறு கேட்கப்படுகிறது.

அக்கல்லூரியின் மிகவும் பிரபலமான அம்சம் என்ன என்று கேட்கப்பட்டபோது, ​​"பிணங்களை அறுவை சிகிச்சை செய்வதில் நாங்கள் பிரபலமானவர்கள்" என்று அவர் பதிலளிக்கிறார். கல்லூரியைச் சேர்ந்த யாரையாவது காதலிப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, "இல்லை, அவர்கள் மிகவும் அசிங்கமாக இருப்பார்கள்" என்று அவர் கூறுகிறார். கல்லூரியைப் பற்றி கூறுமாறும் கேட்கப்பட்டதற்கு அவர், `அங்குள்ள ஆசிரியர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள்' என்று பதிலளிக்கிறார்.

வழக்கு பதிவு

இச்சர்ச்சைகளை தொடர்ந்து காமெடி ஷோ நடத்திய பிரணித் மோரே, டாக்டர் சாஜல் பவார், ஹிமான்ஷு ஜங்ரா மற்றும் சிலர் மீது மாநில சைபர் குற்றப்பிரிவு போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். நகைச்சுவை நிகழ்ச்சிகளின்போது பிரணித் மோரே ஆபாசமான உள்ளடக்கத்தை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாக்டர் சாஜலிடமிருந்து அவரது மருத்துவ படிப்புக்கு அரசு செலவிட்ட தொகையை வசூலிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User