கேரளம்: போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க 'ஆபரேஷன் தூஃபான்' அறிவித்தார் மாநில உள்துறை அமைச்சர்!

May 24, 2026 - 09:31
0
கேரளம்: போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க 'ஆபரேஷன் தூஃபான்' அறிவித்தார் மாநில உள்துறை அமைச்சர்!

போதைபொருள் புழக்கத்தில் இந்தியாவில் மூன்றவது மாநிலமாக கேரளம் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. போதை கலாச்சாரத்தை தடுக்கும் விதமாக புதிதாக பதவி ஏற்றுள்ள காங்கிரஸ் அரசு 'ஆபரேஷன் தூஃபான்: தி நார்கோ ஹன்ட்' (Operation Toofan: The Narco Hunt) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தூஃபான் என்பதற்கு இந்தி மொழியில் கொடுங்காற்று என அர்த்தமாகும். மாணவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையையும், குடும்பத்தையும் சீர்குலைக்கும் போதை என்னும் கொடுங்காற்றை அழிக்கும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேரள மாநிலத்தில் உள்ள 484 காவல் நிலையங்களுக்கும் புதுப்பொலிவு அளிக்கப்படும். காவல் நிலையத்திற்கு வருபவர்களை 'காலை வணக்கம்' மற்றும் 'நமஸ்காரம்' எனக் கூறி வரவேற்க வேண்டும். காவல் நிலையங்களைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் வாகனங்களை ஏலம் விடுமாறும் டி.ஜி.பி-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனையில் எந்தவித சமரசமும் அனுமதிக்கப்படாது. காவல் நிலையங்கள் பொது சேவை மையங்களாக மாற்றப்படும். போதைப்பொருட்களைப் பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் மற்றும் விநியோகிப்போர் காவல்துறையின் கடுமையான கண்காணிப்பில் இருப்பார்கள். 'ஆபரேஷன் தூபான்: தி நார்கோ ஹன்ட்' (Operation Toofan: The Narco Hunt) என்ற பெயரில் போதைப்பொருள் வேட்டை நடத்தப்படும். அதற்காக மாநிலம் தழுவிய ஆய்வு தொடங்கப்படும். போதைப்பொருட்களைக் கொண்டு குழந்தைகளைக் குறிவைக்கும் கும்பல்களை வேரோடு அகற்றுவதே இதன் நோக்கம். 

முதல்வர் வி.டி சதீசனுடன் ரமேஷ் சென்னிதலா

அனைத்துப் பள்ளிகளின் அருகிலும் போலீஸ் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மாணவர்களுக்குப் போதைப்பொருள் விநியோகம் செய்ததாக குறைந்தபட்சம் இரண்டு வழக்குகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள். மாவட்டங்களில் போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்படும். சமூக ஊடகங்கள் வழியாக நடக்கும் போதைப்பொருள் பரிவர்த்தனைகளைத் தடுக்க சைபர் ரோந்து (Cyber Patrol) மேற்கொள்ளப்படும். போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதன்மூலம் சம்பாதித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

ரமேஷ் சென்னிதலா

மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் மாஃபியாவை ஒடுக்குவதற்காக, கேரள போலீஸ் டி.ஜி.பி பிற மாநிலங்களின் டி.ஜி.பி-க்களுடன் இணைந்து செயல்படுவார். ரசாயன மற்றும் செயற்கை போதைப்பொருட்கள், கலப்பின கஞ்சா ஆகியவற்றின் வரத்தைத் தடுக்க சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பள்ளி வளாகங்கள் கண்காணிக்கப்படும். பள்ளிகள், விடுதிகளில் முன்னறிவிப்பு இன்றி ரெய்டு நடத்த போலீஸுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், டிஜே பார்ட்டிகள், காயல் மற்றும் கடற்பகுதிகளில் நடைபெறும் பார்ட்டிகள் ஆகியவற்றில் புகையிலை விற்பனைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கேரளத்தில் போதைப்பொருளின் வேர்களை அறுத்தெறிவோம். இது எதிர்காலத் தலைமுறையினரை மனதில்கொண்டு நடத்தப்படும் ஒரு ஆபரேஷன் ஆகும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User