கேரளம்: பொழுதுபோக்கு பூங்கா ராட்டின விபத்து; காயம் அடைந்தவர்கள் குப்பை எடுக்கும் வாகனத்தில் மீட்பு?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியில் ஹேப்பிலேண்ட் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு விடுமுறையில் ராட்டினங்கள் உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்கவும் கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
இன்று கேளிக்கை பூங்காவிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருந்தனர். அந்த ராட்டினத்தில் 26 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். அந்தச் சமயத்தில் திடீரென ராட்டினம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
ராட்டினத்தின் அடிப்பகுதியில் உள்ள வெல்டிங் இணைப்புகள் துருபிடித்த நிலையில் உறுதியிழந்து இருந்ததால் அது முறிந்து விழுந்துள்ளதாகத் தெரியவந்தது. ராட்டினம் உடைந்துவிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி இருந்தது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டு, காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 2 பெண்கள் 3 குழந்தைகள் என 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்த மனோரதி (54), சீமணி (49), மாலினி (49), ஷியாம் டேனியல் (14) மற்றும் ரோஸ் (16) எனவும், அவர்கள் ஒரே குடும்ப உறுப்பினர்கள் எனத் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹேப்பிலேண்ட் விபத்து தொடர்பாக வெஞ்ஞாறமூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், உரிமத்தை மறுபரிசீலனை செய்யும் பொறுப்பு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கே உரியது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பி.சி.விஷ்ணுநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து, பொழுதுபோக்கு பூங்காவின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்காததால் குப்பை எடுத்துச்செல்லும் வாகனத்தில் காயம் அடைந்தவர்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
மேலும், பூங்காவில் முறையான பராமரிப்பு இல்லாததே விபத்துக்குக் காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வழக்கறிஞர் பிந்து கிருஷ்ணா கூறுகையில், "பூங்கா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முறையான ஆய்வும் நடவடிக்கையும் எடுக்கப்படும். பாதுகாப்புப் பிரச்னை காரணமாக அது உடைந்து விழுந்ததா எனவும், தேவையான தூரம் பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வுசெய்வதுடன், சான்றிதழும் சரிபார்க்கப்படும்" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)