INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்; சாய், பண்ட் அரைசதம்! - முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்

Jun 06, 2026 - 18:01
0
INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்;  சாய், பண்ட் அரைசதம்! - முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோரின் நேர்த்தியான சதங்களாலும், கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் விளாசிய அதிரடி அரைசதத்தாலும், இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்துள்ளது.

முல்லன்பூரில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில், பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் நிதானமான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், ஜெய்ஸ்வால் 24 ரன்களில் சலீம் சைஃபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 41/1 ஆக இருந்தது.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

ராகுல் - சாய் சுதர்சனின் வலுவான பார்ட்னர்ஷிப்!

முதல் விக்கெட்டை விரைவில் இழந்தாலும், அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல், இந்திய இன்னிங்ஸை வலுவாக கட்டமைத்தார். இந்த ஜோடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பொறுமையுடன் எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. ராகுல் தனது 21-வது டெஸ்ட் அரைசதத்தை கடந்தார், மறுமுனையில் சாய் சுதர்சனும் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த நிலையில், தனது முதல் சதத்தை நோக்கி முன்னேறிய சாய் சுதர்சன், 81 ரன்களில் சலீம் சைஃபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

சதமடித்த கையோடு வெளியேறிய ராகுல்!

அடுத்து கேப்டன் ஷுப்மன் கில் களத்திற்கு வந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கே.எல். ராகுல், தனது 12-வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால், சதம் அடித்த அடுத்த பந்திலேயே கவனக்குறைவாக ஆடி, கவர் திசையில் கேட்ச் கொடுத்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 247 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

ராகுல்
ராகுல்

கேப்டன் கில், அதிரடி பண்ட் அசத்தல்!

இதன்பின்னர் கேப்டன் ஷுப்மன் கில்லும், ரிஷப் பண்ட்டும் ஜோடி சேர்ந்தனர். கில் தனது கிளாசான ஆட்டத்தை வெளிப்படுத்த, பண்ட் தனது வழக்கமான அதிரடி பாணிக்கு மாறினார். தொடக்கத்தில் சில பந்துகளில் தடுமாறினாலும், நோ-பால்களால் கிடைத்த இரண்டு லைஃப் லைன்களை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். அப்துல் மாலிக் வீசிய ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். மறுமுனையில், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்காமல் ஆடிய கேப்டன் கில், 138 பந்துகளில் தனது 11-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். நாள் முடியும் தருவாயில், ரிஷப் பண்ட்டும் 70 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.

கில்
கில்

முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷுப்மன் கில் 100 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி வலுவான நிலையில் இருப்பதால், இரண்டாம் நாளில் நல்ல ஸ்கோரை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சலீம் சைஃபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User