இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி; தவெக-வில் ஐக்கியமாகிறாரா?

Jul 09, 2026 - 16:02
0
இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி; தவெக-வில் ஐக்கியமாகிறாரா?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை அதிமுக தலைமையகத்தில் நடந்த கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை, ஓசூர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டி புறக்கணித்தது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகாரத்துடன் வலம் வந்த கே.பி.முனுசாமியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், 2016 தேர்தலில் ஓசூர் தொகுதியில் வெற்றி பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை விளையாட்டுத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக்கினார்.

ஆனால், ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட குற்ற வழக்கொன்றில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்றதால், கடந்த 2019- ஆம் ஆண்டு பாலகிருஷ்ண ரெட்டி வகித்த அமைச்சர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் சட்ட ரீதியாக பறிபோனது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து கடந்த 2024 ஆம் ஆண்டு விடுதலை பெற்றார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டார்.

கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ண ரெட்டி

இவருக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமிக்கு ஒத்துவராமல் இருந்த நிலையில், அதையெல்லாம் மீறி கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓசூர் தொகுதியைப் பெற்று வெற்றியும் பெற்றார். இது, தன் தொகுதியில் தோல்வியடைந்த கே.பி.முனுசாமி தரப்புக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்காமல் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்த வேலுமணி தலைமையிலான அணியில் இடம்பெற்றதால், இவர் வகித்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து கே.பி.முனுசாமியின் ஆதரவாளரான எம்.ஜி.எம் ராமு நியமிக்கப்பட்டார்.

அரசியல் முடிவு எடுப்பதில் வேலுமணி அணி குழப்பத்தில் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுக-வுக்குத் திரும்பினார் பாலகிருஷ்ண ரெட்டி. ஆனால், அவருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்காமல் அதிகாரமற்ற அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிகப்பட்டார். அது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

பாலகிருஷ்ண ரெட்டி

இந்த நிலையில்தான் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

இது குறித்து பாலகிருஷ்ண ரெட்டி எந்தக் கருத்தும் சொல்லாத நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வுக்குச் செல்ல உள்ளதாகச் சொல்லப்படுவது அதிமுக வட்டாரத்திலும், கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக-வினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User