ஹரியானா: மைனர் பெண்ணுடன் காதல்; பேட்மிண்டன் வீரரைச் சித்ரவதை செய்து கொன்ற பெண்ணின் குடும்பம்?
ஹரியானா மாநிலம் பிவாடி அருகில் உள்ள சைத்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மோனு. பேட்மிண்டன் வீரரான மோனு ஹரியானாவில் மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்று இருக்கிறார்.
21 வயதாகும் மோனு சமீபத்தில்தான் 12வது வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இவர் பரிதாபாத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மைனர் பெண்ணுடன் மோனு வீட்டை விட்டு வெளியேறினார். போலீஸாரின் விசாரணையில் மைனர் பெண் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் மோனுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் மோனு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வெளியில் படுகாயத்துடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உறவினர்கள் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் மோனு இறந்து போனார். பெண் வீட்டார் மோனுவைக் கடத்தி அடித்து உதைத்து வீட்டிற்கு வெளியில் போட்டுவிட்டதாக மோனுவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மோனுவின் உறவினர் நரேந்திரா கூறுகையில், ''மைனர் பெண்ணின் உறவினர்கள் சைத்பூரில் இருக்கின்றனர். இதனால் அடிக்கடி அப்பெண் தனது உறவினர்கள் வீட்டிற்கு வருவார்.
அப்படி வரும்போது மோனுடன் தொடர்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. மோனுவை பெண் வீட்டார் கடத்திச்சென்று மூன்று நாள்கள் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.
மோனுவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மைனர் பெண் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)