ஓய்வுபெற ஒரு மாதம் இருந்த நிலையில் நீட் வினாத்தாளை கசியவிட்ட பள்ளி தலைமை ஆசிரியை - கைது செய்த சிபிஐ

May 23, 2026 - 12:01
0
ஓய்வுபெற ஒரு மாதம் இருந்த நிலையில் நீட் வினாத்தாளை கசியவிட்ட பள்ளி தலைமை ஆசிரியை - கைது செய்த சிபிஐ

நாடு முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பு கசிந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிராவில் லாத்தூரை சேர்ந்த ஆசிரியர் சிவ்ராஜ், பேராசிரியர் குல்கர்னி உட்பட நாடு முழுவதும் இது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதிதாக லாத்தூரை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை மனீஷா சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீட் வினாத்தாளை இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மனீஷா மந்தாரே என்பவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நீட் தேர்வை நடத்தும் தேசிய டெஸ்டிங் ஏஜென்சி மனீஷா சஞ்சயை நீட் இயற்பியல் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் சேர்த்து இருந்தது.

இயற்பியல் வினாத்தாளை பார்க்கும் அளவுக்கு மனீஷாவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.

மனீஷா தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இயற்பியல் வினாத்தாளை மனீஷா மந்தாரேயுடன் பகிர்ந்து கொண்டது சி.பி.ஐ நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனீஷா சஞ்சய் பகிர்ந்த வினாக்கள் நீட் தேர்வில் வந்திருந்தது. மனீஷாவின் கைதை தொடர்ந்து இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மனீஷா சஞ்சய் அடுத்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். ஆனால் இப்போது வினாத்தாளை கசியவிட்டு கைது செய்யப்பட்டு இருப்பதால் அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மனீஷா சஞ்சய் பணிபுரியும் பள்ளி செயலாளர் சதீஷ் கவாலி கூறுகையில், மனீஷா 1992 ஆம் ஆண்டு முதல் இந்த பள்ளியில் பணியாற்றுவதாகவும், இதற்கு முன்பு ஜூனியர் கல்லூரி அளவில் இயற்பியல் கற்பித்தார் என்றும், 2024 ஆம் ஆண்டு பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றார் என்றும், மனீஷாவின் செயல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, நீட் தேர்வுக்கான வினாத்தாளை அமைத்த குழுவின் ஒரு பகுதியாக இடம் பெற்று இருந்த வேதியியல் விரிவுரையாளர் குல்கர்னி, மனீஷா மாந்தரே, அழகு நிலைய உரிமையாளர் மனீஷா வாக்மரே மற்றும் நாசிக்கில் கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வந்த தனஞ்சய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர லாத்தூரை சேர்ந்த டாக்டர் ஒருவரிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User