மகா. சட்டமேலவை: விலைபோன எதிர்க்கட்சி வேட்பாளர்கள்? - 6 ஆளும்கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

Jun 05, 2026 - 12:31
0
மகா. சட்டமேலவை: விலைபோன எதிர்க்கட்சி வேட்பாளர்கள்? - 6 ஆளும்கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 17 சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 22-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். எதிர்க்கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டு இருந்த வேட்பாளர்கள் பலர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். ஆளும் பா.ஜ.க கூட்டணியினர் எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் பேசி அவர்களை போட்டியில் இருந்து விலகும்படி செய்துள்ளனர். அல்லது அவர்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கின்றனர் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேயின் மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ள மாப்பிள்ளையின் தந்தை அருண் லகானி வார்தா பா.ஜ.க சார்பாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க வேட்பாளர்கள்

இது தவிர புனேயில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விக்ரம் காகடேயும், ராய்கட்-ரத்னகிரியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனிகேத் தட்கரேயும், தானே மற்றும் யவத்மாலில் சிவசேனா வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தங்களது கூட்டணி 17 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வேட்பு மனுவை வாபஸ் பெற்ற இரண்டு வேட்பாளர்களை உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார். இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் அளித்த பேட்டியில், ''சட்டமேலவை தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆளும் பாஜக கூட்டணி எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கி வருகிறது''என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் சார்பாக 9 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களில் 4 பேர் தங்களது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர். ஒரு வேட்பாளரின் மனு தொழில் நுட்ப காரணங்களை காட்டி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

இப்போது காங்கிரஸ் சார்பாக வெறும் 4 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் தங்களது வேட்பு மனுவை திரும்ப பெற்றுள்ளனர். அவர்கள் ஆளும் கட்சிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இதற்கு முன்பு நடந்த மாநகராட்சி தேர்தலிலும் இதே போன்று ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சி வேட்பாளர்களை தேர்தலுக்கு முன்பே போட்டியில் இருந்து விலக வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User