`பிரதமர் மோடியின் நள்ளிரவு வீடியோ முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரத முடிவு வரை' - என்ன நடந்தது?

Jul 24, 2026 - 10:32
0
`பிரதமர் மோடியின் நள்ளிரவு வீடியோ முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரத முடிவு வரை' - என்ன நடந்தது?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்துடன் இணைந்து ஜூன் 28 அன்று சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தலைமையிலான இந்த இயக்கம், கல்வித் துறையில் சீர்திருத்தங்கள், தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்பது மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா ஆகியவற்றை வலியுறுத்தி வருகிறது.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

கடந்த வாரம், வாங்சுக் போராட்டம் நடத்திய இடத்திலிருந்து அகற்றப்பட்டு டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உண்ணாவிரதத்தை முடிக்க மறுத்ததால், அவருக்குப் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து அவர் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உண்ணாவிரதத்தின் போது வாங்சுக் சுமார் 11 கிலோ எடை குறைந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நேற்று ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்று வரும் வேளையில், சமூக விரோத சக்திகள் வன்முறையைத் தூண்ட முயல்வதாக வரும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கிறது. எதிர் தரப்பு என்ன செய்தாலும் நமது பதில் அமைதியாக மட்டுமே இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நள்ளிரவில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், ``வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையிலான மசோதாவை அரசு அறிமுகப்படுத்தும். வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

வினாத்தாள் கசிவு என்பது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகவும் வேதனைக்குரியது. நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு எழுந்தவுடன் அரசு துரிதமாகச் செயல்பட்டது. குற்றவாளிகள் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி ஆண்டு வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களது மிக முக்கியப் பொறுப்பாக இருந்தது. அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, 22 லட்சம் மாணவர்கள் மறுதேர்வு எழுதுவதை அரசு உறுதி செய்துள்ளது. மேலும், கல்வி அமைச்சகத்தில் பெரிய அளவிலான உயர் அதிகாரிகள் மாற்றமும் செய்யப்பட்டது.

புதிய உயர்கல்விச் செயலாளராக நரேஷ் குமார் கங்வாரும், பள்ளித் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளராக டி.கே. அனில் குமாரும் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, விரைவான நீதியை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டம் தேர்வு முறையை முற்றிலும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும், மாணவர்களின் நலன்களைப் பேணுவதற்கும் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கியப் படியாக அமையும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் இந்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், நள்ளிரவுக்குப் பிறகு மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

சோனம் வான்சுக் - ஜே.பி.நட்டா
சோனம் வான்சுக் - ஜே.பி.நட்டா

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிடுகையில், ``மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் லடாக் அபெக்ஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் 26 நாட்களுக்குப் பிறகு எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். முன்னதாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 எம்.பி.க்கள் நேரில் வந்தும், கடிதம் மூலமாகவும் எனது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர்.

பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், வன்முறைக்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதே வேளையில், எந்த இடத்திலும் எந்த வகையான வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வாங்சுக்கின் அறிவிப்பைத் தொடர்ந்து, அவர் விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``சோனம் ஜி மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனது அன்றாடப் பணிகளைத் தொடர வேண்டும்.

சோனம் வான்சுக்
சோனம் வான்சுக்

தனது பழைய உடல் எடையை விரைவில் திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அவர் ஆரோக்கியமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் தனது பதிவில் கூறினார்.

இதனிடையே, வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது தங்களுக்கு நிம்மதி அளிப்பதாகத் CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் பதிவில், ``சோனம் சார் 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது எங்களுக்கு நிம்மதியையும் நன்றியையும் அளிக்கிறது.

உங்களின் அசாதாரண தைரியத்திற்கும் தியாகத்திற்கும் நன்றி. உங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியுள்ளீர்கள். இந்த நாட்டுக்கு உங்கள் உயிர் மிகவும் மதிப்புமிக்கது. அதேசமயம், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியின் அமைதிப் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User