"யார் குரலையும் கேட்காமல் indifferent, inactive ஆக இந்த அரசு இருப்பது நல்லதல்ல" - ஸ்டாலின் கண்டனம்

Jul 30, 2026 - 15:30
0
"யார் குரலையும் கேட்காமல் indifferent, inactive ஆக இந்த அரசு இருப்பது நல்லதல்ல" - ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா?

முதலமைச்சரின் திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இது குறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன.

மாநிலத்தின் முக்கியப் பிரச்னையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க-தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள்.

எனவே அவர்களுக்கு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும். விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தவெக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User