கைமாறாக வாங்கிய பணம்; ரூ.1500-ஐ திருப்பிக் கொடுக்க நண்பரைத் தேடி அலையும் 84 வயது முதியவர்!

May 20, 2026 - 19:30
0
கைமாறாக வாங்கிய பணம்; ரூ.1500-ஐ  திருப்பிக் கொடுக்க நண்பரைத் தேடி அலையும் 84 வயது முதியவர்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன். 84 வயதான இந்த முதியவர், கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார். கோவையைச் சேர்ந்த இவரின் நண்பரான பால்சாமி என்பவர், கோவில்பட்டி கருவாட்டுப் பேட்டையில் கருவாட்டுக்கடை வைத்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது தேவைக்காக 3,000 ரூபாயை பால்சாமியிடம் கைமாற்றாகப் பெற்றிருந்தார் பரமசிவன். அதில் இரண்டு மாதங்களில் ரூ.1,500-ஐ திருப்பிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் பரமசிவனும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். இதனால், பரமசிவன் – பால்சாமி இடையே தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது.

கோவில்பட்டி

இந்த நிலையில், தற்போது பால் சாமிக்கு தான் தரவேண்டிய 1,500 ரூபாயை எப்படியாவது அவரிடம் கொடுத்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் பரமசிவன். பால்சாமி நடத்தி வந்த கருவாட்டுக்கடையும் தற்போது இல்லை. ஆனாலும், பால்சாமி மற்றும் அவரது குடும்பம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் பால்சாமி கடை வைத்திருந்த பகுதி, அவர் தங்கி இருந்த பகுதி என எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்பதால் கவலையுடன் அவரைப் பற்றி விசாரித்து வருகிறார் பரமசிவன்.

இது குறித்து பரமசிவன் கூறுகையில், ”கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது அவசரத் தேவைக்காக ரூ.3,000 பணம் கொடுத்தார் நண்பர் பால்சாமி. ஏற்கெனவே கொடுத்த ரூ.1,500 போக மீதமுள்ள ரூ.1,500-ஐ அவரிடம் திருப்பிக் கொடுக்க அவரை தேடி அலைந்து வருகிறேன். அவரைப் பற்றிய எந்த தகவலும் எனக்கு கிடைக்க வில்லை. அவரது குடும்பம் கோவையில் இருப்பதாக என்னிடம் கூறிய நினைவு இருக்கிறது. ஆனால், கோவையில் அவர் எந்தப் பகுதியில் உள்ளார் என்ற தகவல் தெரியவில்லை.

பரமசிவன்

எனக்கும் வயது மூப்பு ஆகிவிட்டது. உடல் நிலையும் சரியில்லை. நான் இறப்பதற்குள் அவரிடமோ அவரது குடும்பத்தினரிடமோ மீதி ரூ.1,500-ஐ திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறேன். அவரைப் பற்றிய தகவல் கிடைத்துவிடாதா என கோயிலுக்குச் சென்று சாமியையும் வணங்கி வருகிறேன்.” என்றார். இன்றைய சூழலில் கடனாக வாங்கிய பணத்தையே  பலர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வரும் நிலையில், தன்னுடைய அவசர தேவைக்கு உதவிய நண்பருக்கு மீதி பணத்தை கொடுக்க வேண்டும் என்று 84 வயதில் முதியவர் ஒருவர் அவரைத் தேடி வருகிறார் என்பது வியப்பாகவே உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User