“சமூக நீதி மண் என்று சொன்னாலும், அவ்வளவு எளிதாக ஒரு தலித் இங்கு முதல்வர் ஆகிவிட முடியாது”- திருமா

May 18, 2026 - 17:31
0
“சமூக நீதி மண் என்று சொன்னாலும், அவ்வளவு எளிதாக ஒரு தலித் இங்கு முதல்வர் ஆகிவிட முடியாது”- திருமா

"பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகத்தில் அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக முடியாது" என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக - அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக என்னிடம் யாரும் பேசவில்லை. ஆனால், இது தொடர்பாக பல இடங்களில் கிசுகிசுப்பாக பேசப்பட்டது என்றுதான் பேட்டியில் சொல்லியிருந்தேன்.

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,
திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

தலைவர்கள் யாரும் என்னுடன் இதுபற்றி பேசவில்லை. எனக்கு இதுபற்றி தகவல்கள் வந்தபோது, இப்படிப் பேசுவதே தவறு என்றுதான் சொன்னேன். இன்னமும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். அதனால் திமுக தலைவரை எப்போது வேண்டுமானாலும் சந்திப்போம்.

தவெக ஆட்சியமைக்க மட்டுமே நாங்கள் ஆதரவளித்திருக்கிறோம். இரு எம்எல்ஏ-க்களால் ஆட்சியமைக்க முடியாமல் போய்விடக் கூடாது, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது, மறுபடியும் ஒரு தேர்தல் வந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் ஆதரவளித்தோம்.

விசிக ஆதரவு அளிக்காததால் தவெக-வால் ஆட்சியமைக்க முடியாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆதரவளித்தோம். வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம், அமைச்சரவையில் பங்கு பெற மாட்டோம் என ஏற்கெனவே சொல்லிவிட்டோம்.

எங்கள் கட்சியின் சில தலைவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என இப்போதும் பேசிக் கொண்டுள்ளார்கள். ஆனாலும், கட்சியின் தலைவராக நான் எடுத்த முடிவை அனைவரும் ஏற்பார்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்

சமூக நீதி மண், பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகம் சாதிய இறுக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத மாநிலம். இங்கே அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக முடியாது.

நான் 40 ஆண்டுகள் அரசியலில் உள்ளேன், இங்கே கள யதார்த்தம் என்னவென்று எனக்கு தெரியும். எனவே யாரோ சொன்னார்கள் என்பதற்காக கற்பனையாக நான் வாழ மாட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User