முடிவுக்கு வந்த அதிகார போட்டி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா சம்மதித்தது எப்படி?
கர்நாடகாவில் துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவக்குமார் முதல்வர் பதவிக்கு வரவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். 2023ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு டி.கே.சிவக்குமார்தான் முதல்வராக வர இருந்தது. டி.கே.சிவக்குமார்தான் சட்டமன்ற தேர்தலில் கட்சியை வெற்றி பெற வைக்க முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் காங்கிரஸ் தலைமைதான் சித்தராமையாவை முதல்வராக்கியது.
இதனால் டி.கே.சிவக்குமார் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து அதிகாரப்போட்டி இருந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் கட்சி தலைமை நிர்வாகிகளை சந்திக்கும்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்.
ஏற்கனவே தலைமை பிரச்னையால்தான் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழக்க நேரிட்டது. இதே போன்ற ஒரு நிலை கேரளாவிலும் வரும் அபாயம் இருந்தது. தற்போது முதல்வராக இருக்கும் சதீசனுக்கு பதில் வேணுகோபாலை முதல்வராக்க காங்கிரஸ் தலைமை முயற்சி மேற்கொண்டது.

ஆனால் பிரச்னையாகிவிடக்கூடாது என்பதை உணர்ந்து சதீசனுக்கே கட்சி தலைமை முதல்வர் பதவியை வழங்கியது. கேரளா பிரச்னை முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகாவில் முதல்வர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் டி.கே.சிவக்குமார் காய்நகர்த்த ஆரம்பித்தார்.
அடுத்த இரண்டு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கட்சிக்குள் தலைமைக்கான அதிகாரப்போட்டி இருந்தால் அது தேர்தலை சந்திக்கும்போது கட்சிக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கருதி கர்நாடகாவில் முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்க கட்சி தலைமை முடிவு செய்தது.
இதற்காக முதல்வர் சித்தராமையாவை கட்சி தலைமை டெல்லிக்கு அழைத்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது. புது டெல்லியில் நடைபெற்ற, பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் முதல்வரை மாற்றுவதற்கான இறுதி முடிவு எட்டப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து சித்தராமையா நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக அனைத்து அமைச்சர்களையும் சித்தராமையா விருந்துக்கு அழைத்து சிறப்பித்தார். சித்தராமையாவை கண்ணியமான முறையில் முதல்வர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு அவருக்கு 2029ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் முக்கியத்துவம் கொடுக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
அதோடு உடனடியாக ராஜ்ய சபை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும், கர்நாடகாவில் அமைச்சர்கள் மற்றும் எதிர்கால அரசியல் நியமனங்களைத் தேர்ந்தெடுப்பதில் சித்தராமையாவிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், அவர் தொடர்ந்து ஒரு செல்வாக்குமிக்க தலைவராக இருப்பார் என்று கட்சித் தலைவர்கள் அவருக்கு உறுதியளித்தனர்.

2028 கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு கட்சியின் ஒற்றுமையின் அவசியத்தை காங்கிரஸ் கட்சி சித்தராமையாவிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும், ஆட்சி மாற்றத்தின் மூலம் சித்தராமையாவும் சிவக்குமாரும் ஒருமித்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதில் ராகுல் காந்தி நேரடியாக முக்கிய பங்காற்றியதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஜூன் 18ம் தேதி ராஜ்ய சபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் கர்நாடகாவில் இருந்து 4 பேர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். அவர்களில் 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற முடியும். அதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சித்தராமையா, சிவக்குமார் சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோர் பெயர் இதற்கு அடிபடுகிறது.
கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் ஜார்கிஹோலியை நியமிக்கவேண்டும் என்று சித்தராமையா கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு ஒன்றுக்கும் மேற்பட்ட துணை முதல்வர்களையும் நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)