'காலி சேர்கள்... பாதியில் கலைந்த கூட்டம்.!' - தவெகவின் மதுராந்தக இணைப்பு விழா சொதப்பியதா?

Jun 15, 2026 - 18:01
0
'காலி சேர்கள்... பாதியில் கலைந்த கூட்டம்.!' - தவெகவின் மதுராந்தக இணைப்பு விழா சொதப்பியதா?

மதுராந்தகத்தில் நேற்று மாற்றுக்கட்சியினரின் மாபெரும் இணைப்பு விழாவை நடத்தியிருந்தது தவெக. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் உட்பட பல அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

மரகதம் குமரவேல்
மரகதம் குமரவேல்

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடாமல் காலி சேர்களாக காணப்பட்டதால் நிகழ்வில் கூடியிருந்த தவெகவின் முக்கியஸ்தர்கள் கடும் அப்செட் என்கின்றனர் லோக்கல் நிர்வாகிகள்.

அதிமுகவை சேர்ந்த 25,000 முதல் 30,000 நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பெரிய விழா எடுத்து தவெகவில் இணைக்கிறேன் என்று கூறிதான் மரகதம் குமரவேல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆட்சியமைத்த பிறகு முதல் முதலாக பிரமாண்டமான இணைப்பு விழா என்பதால் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் உட்பட இன்னும் சில அமைச்சர்கள் என பலரும் விழாவுக்கு வர ஒத்துக் கொண்டனர்.

கூட்டத்தை காட்ட நிகழ்வு நடந்த மைதானத்தில் 25,000 இருக்கைகளும் போடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடவில்லை. பாதிக்கும் மேற்பட்ட சேர்கள் காலியாகவே கிடந்தன. அமைச்சர்கள் பேசும் போது கூடியிருந்த கொஞ்ச கூட்டமும் கலைந்து போக ஆரம்பித்தது. இதனாலயே அமைச்சர்கள் இரண்டே நிமிடத்தில் பேச்சையும் முடித்துக் கொண்டனர்.

இணைப்பு விழா
இணைப்பு விழா

முதல்வர் விஜய்யின் படத்தை வைத்து அமைச்சர்களெல்லாம் கூடி 'அதிமுகவினர் அத்தனை பேரும் தவெக பக்கம் வந்துவிட்டார்கள்' என பில்டப் கொடுத்த பிறகும் இணைப்பு விழாவில் கூட்டம் கூடவில்லை என்பதால் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பலருமே அப்செட் என்கின்றனர். எதிர்க்கட்சியான திமுகவுமே காலி சேர்களின் வீடியோவை எடுத்து போட்டு தவெகவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதுசம்பந்தமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மரகதம் குமரவேலுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். 'நிகழ்ச்சியை 6 மணிக்கு தொடங்க திட்டமிட்டிருந்தோம். அதனால் 4 மணிக்கே கூட்டம் கூட தொடங்கிவிட்டது. சேர்கள் எல்லாம் நிறைந்துவிட்டன. ஆனால், நிகழ்ச்சியை தொடங்க தாமதமாகிவிட்டது. அதனால் கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது. இரவு 7:30 மணிக்குதான் பொதுச்செயலாளர் ஆனந்த் வந்தார். அவர் வரும் போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், அவருக்கு முன்பாக ஆதவ், செங்கோட்டையன் போன்றோரெல்லாம் 'மாநாடு மாதிரி கிராண்டா பண்ணிட்டீங்களே' என கூட்டத்தை பார்த்து வியந்து பேசினர்.

காலி சேர்கள்
காலி சேர்கள்

நிகழ்ச்சி தொடங்க தாமதமானதுதான் பிரச்னை. கூட்டம் இல்லை என விமர்சிப்பது தவறு. கூட்டம் கூடிவிட்டுதானே கலைந்து போயிருக்கிறது. இதை எப்படி கூட்டம் இல்லை என சொல்ல முடியும்' என்று புதுவிளக்கம் கொடுத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User