'இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! 'இப்படி' போராடுவோம்' - சிவா திலீபனுக்கு ஸ்டாலின் இரங்கல்

Mar 19, 2026 - 11:02
 0
'இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! 'இப்படி' போராடுவோம்' - சிவா திலீபனுக்கு ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மே 17 இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். கடந்த 12-ம் தேதி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் போராட்டம் நடந்தது.

அதில் கலந்துகொண்ட சிவா திலீபன் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில், அங்கே வந்த ரயில் ஒன்றின் மீது, 'தமிழ் வாழ்க' என்று முழங்கிப் பாய்ந்திருக்கிறார்.

இதில் காயமடைந்த அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல், அவர் இறந்துவிட்டார்.

மே 17 இயக்கத்தினர் போராட்டம்
மே 17 இயக்கத்தினர் போராட்டம்
இவருக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!

இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.

மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!

இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்".

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0